25 வருஷத்துக்கு மோடியை அசைச்சுக்க முடியாது.. அசைச்சுக்க முடியாது.. சொல்வது சிவசேனா!
மும்பை: மஹாராஷ்டிராவில் பாஜக- சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. அங்கு மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பாஜக - சிவசேனா கூட்டணி 41 இடங்களை கைப்பற்றி அசத்தி இருக்கிறது. இதர 7 இடங்களை மட்டுமே, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி பெற்றது.
பாஜக தனிப்பெரும்பான்மை பெறுவதற்கு அடித்தளமிட்ட மாநிலங்களில் ஒன்றாக மஹாராஷ்டிரா மாறி இருக்கிறது. இந்த மாபெரும் வெற்றியை பாஜக - சிவசேனா கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடிக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த மாபெரும் வெற்றி குறித்து சிவசேனா மூத்த தலைவரும், எம்பி.,யுமான சஞ்சய் ரவுத் கூறியதாவது,"ரஃபேல் போர் விமான பேரம் உள்ளிட்டவற்றை வைத்து பிரதமர் மோடிக்கு எதிரான மாயத் தோற்றமான சூழலை உருவாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்தன. இதற்கு மக்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர்.
பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அமெரிக்க, ரஷ்ய அதிபர்களுக்கு அழைப்பு?
குழம்பிய கொள்கைகளுடன் எதிர்க்கட்சிகள் எங்களுக்கு எதிராக நின்றது. ஆனால், மக்கள் சரியான தீர்ப்பை வழங்கி இருக்கின்றனர். அடுத்த 25 ஆண்டுகளுக்கு மோடியை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது என்பதை இந்த மக்கள் தீர்ப்பு காட்டுகிறது.
கடந்த ஆண்டு ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் கூட லோக்சபா தேர்தலில் மோடியின் தலைமை மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிப் பணிகளை பிரதமர் மோடி அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்வார் என்று கூறியுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மீது சிவசேனா தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தது. இந்த நிலையில், லோக்சபா தேர்தலின்போதுதான் கூட்டணி அமைத்தது நினைவுகூறத்தக்கது.