மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடப்பதாக வீடியோ.. பதற வைத்த போலி போலீஸ் கமிஷ்னர்
மும்பை: மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதாகவும், யாரும் வெளியில் வரவேண்டாம் என்றும் மும்பை போலீஸ் கமிஷனர் பெயரில் சமூக வலைத்தளங்களில் போலியான செய்தி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை போலீஸ் கமிஷனர் என அறிமுகப்படுத்திக் கொண்ட டிப்டாப் ஆசாமி ஒருவர் நேற்று சமூக வலைத்தளங்களில் மராத்தி மொழியில் வீடியோ ஒன்றை வெளியிட்டார், அவர் வெளியிட்ட வீடியோவில், மும்பையில் தாக்குதல் நடக்கிறது. மக்கள் எச்சரிக்கையாக இருங்கள், வீட்டைவிட்டு வெளியில் வரவேண்டாம். ரயில் நிலையங்கள், பார்கள், சினிமா தியேட்டர்கள், ஆடிட்டோரியம் உட்பட அனைத்து பொது இடங்களிலும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறப்பட்டது.
ஆனால், அந்த வீடியோவில் பேசியிருந்தது மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பர்வே கிடையாது என்பது உறுதி செய்யப்பட்டது. போலீஸ் கமிஷனர் பெயரில் யாரோ ஒரு விஷமி போலியாக இந்த வீடியோவை வெளியிட்டதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
முன்னதாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஹேமந்த் மகாஜன் போன்ற தோற்றத்தில் ஒரு வீடியோவை அந்த ஆசாமி வெளியிட்டார் அந்த வீடியோவில், "காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு இருப்பதால் பாகிஸ்தான் ராணுவமும், ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனமும் இந்தியாவில் தாக்குதல் நடத்தக்கூடும். நாட்டின் 19 நகரங்களை குறிவைத்துள்ளனர்.
எல்லையில் நமது நாட்டை பாதுகாத்துக்கொள்ளும் வலிமை நமக்கு உள்ளது. ஆனால் வெடிகுண்டு போன்ற தாக்குதலில் ஈடுபட்டால் மிகவும் கடினம். அதை அரசால் கட்டுப்படுத்த முடியாது. இருப்பினும் மக்கள் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பக்கத்து நாட்டில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்வது அவசியம் என கூறியுள்ளார். இந்த வீடியோக்களை பார்த்த பலரும் உண்மை என நம்பி தெரிந்தவர்களுக்கு அனுப்பி உள்ளனர். இந்த வீடியோ போலீயானது என்பதை பின்னர் போலீசார் அறிவித்தனர்.
இதனிடையே சுதந்திர தினத்தையொட்டி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக கருதப்படுவதால் மும்பை உள்பட நாடு முழுவதும் ரயில் நிலையங்கள் உட்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.