இதயமே நொறுங்கிவிட்டது.. இலங்கை மக்களுக்காக என் குரலை பயன்படுத்துவேன்.. "மணிகே மகே" புகழ் யோஹானி
மும்பை: இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலையை கண்டு என் இதயமே நொறுங்கிவிட்டது என இலங்கை பாடகி யோஹானி கூறியுள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளார்கள். புராண காலத்தில் இலங்கை பற்றி எரிந்தது போல் தற்போதும் பற்றி எரிவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
இலங்கை வன்முறை: கோத்தபாய, மகிந்த ராஜபக்சே வெளிநாடு தப்பி ஓட திட்டம்? தயார் நிலையில் 5 விமானங்கள்?
மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர். இலங்கையில் பிரதமராக இருந்த ராஜபக்ச பதவி விலகிய நிலையில் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.

பொருளாதார நெருக்கடி
மேலும் பொருளாதார நெருக்கடியை சரி செய்யும் முயற்சிகளும் நடைபெறுகின்றன. இந்த நிலையில் இலங்கைக்கு தேவையான உதவிகளை செய்ய தமிழக அரசு முன் வந்துள்ளது. தமிழக அரசின் நிவாரண பொருட்கள் வரும் 22 ஆம் தேதி கப்பலில் செல்கிறது. மொத்தம் 123 கோடி ரூபாய் கொண்ட நிதியுதவி இலங்கைக்கு வழங்கப்படுகிறது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி
அது போல் இலங்கையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 10 லட்சம் அமெரிக்க டாலர் நிதி திரட்டி கொடுக்கும் திட்டத்தை அந்நாட்டு பாடகி யோஹானி முன்னெடுத்துள்ளார். இதற்காக நிதியுதவி அளிக்கும் படி அவர் ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மணிகே மஹே ஹித்தே எனும் சிங்கள பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்.

ஹஸ்கி வாய்ஸ்
தனது ஹஸ்கி வாய்ஸ் மூலம் இளசுகளை முணுமுணுக்க வைத்தவர். தற்போது மும்பையில் இந்திய இசை கலைஞர்களுடன் இவர் பணியாற்றி வருகிறார். இவர் தனது பேட்டியில் கூறுகையில் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் நடக்கும் சம்பவங்களால் மனதுடைந்து போயுள்ளேன்.

மணிகே மகே ஹித்தே புகழ் யோஹானி
நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு நிதியுதவி மட்டும் அல்ல, மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைப்பது முக்கியம். எனது நாட்டு மக்களுக்கு உதவ எனது குரலை பயன்படுத்துவேன். என் நாட்டின் மீது அதிக பற்று வைத்துள்ளேன். நான் மும்பையில் இருந்தாலும் எனது குடும்பம், நண்பர்கள், என்னுடைய இசைக் குழுவினர் எல்லாம் இலங்கையில்தான் உள்ளனர். எனது தாய் நாட்டின் நலனுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றார் யோஹானி.