பொருளாதார மந்த நிலை நிலவுகிறது.. ஆனால் இன்னும் மோசம் அடையவில்லை.. நிர்மலா சீதாராமன் பேச்சு!
பொருளாதார மந்த நிலை தற்போது நிலவி வருகிறது, ஆனால் அது மோசமான நிலையை அடையவில்லை என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
மும்பை: பொருளாதார மந்த நிலை தற்போது நிலவி வருகிறது. ஆனால் அது மோசமான நிலையை அடையவில்லை என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா பொருளாதாரம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இது தொடர்பாக நிறைய சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய நிதி அமைச்சகம் அறிவித்து வருகிறது. ஆனால் இந்த பொருளாதார சரிவு இப்போதைக்கு மீள்வதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இப்போதே ஆட்டோமொபைல் துறையில் பலர் வேலையை இழந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நிதி நெருக்கடி குறித்தும், பொருளாதார மந்த நிலையில் குறித்தும் இன்று லோக்சபாவில் எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பினார்கள். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இது தொடர்பாக நிறைய கேள்விகளை எழுப்பினார்கள்.
இளைஞர்கள் பலர் வேலையை இழக்கிறார்கள், ஜிஎஸ்டி மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது, ஆர்பிஐயிடம் இருந்து மத்திய அரசு அவசரமாக பணம் வேறு வாங்கி இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியது.
இதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் நிதி நிலையை சரி செய்ய போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் பொருளாதாரத்தை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதற்கு போதுமான உதவிகளை பெற்று வருகிறோம்.
பொருளாதார மந்த நிலை தற்போது நிலவி வருகிறது. ஆனால் அது மோசமான நிலையை அடையவில்லை. பொருளாதார பின்னடைவு என்னும் நிலை உருவாகவில்லை. அது இனியும் உருவாகாது. இந்தியாவின் ஜிடிபி நன்றாகவே இருக்கிறது.
இந்தியாவின் உண்மையான ஜிடிபி 2009-2014ல் 6.4% ஆக இருந்தது. 2014-2019 ல் ஜிடிபி மதிப்பு 7.5% ஆக உள்ளது. இதனால் ஜிடிபி குறித்து தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம். வேலைவாய்ப்பு போதுமான அளவில் உருவாக்கப்பட்டு வருகிறது, என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.