மகாராஷ்டிரா அரசுப் பள்ளி மதிய உணவில் பாம்பு.. குழு அமைத்து விசாரணை!
மகாராஷ்டிர அரசுப் பள்ளியில் மதிய உணவில் பாம்பு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை: மகாராஷ்டிராவில் அரசுப்பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த மதிய உணவில் பாம்பு இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த வாரம் விடுதி ஒன்றில் மாணவர்கள் சாப்பிடுவதற்காக வைக்கப்பட்டிருந்த சட்னியில் எலி ஒன்று உயிருடன் கிடக்கும் வீடியோவும், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் தவளை ஒன்று கிடந்த வீடியோவும் வைரலானது.
தற்போது அதே போன்றதொரு சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. அங்குள்ள நான்டட் அருகே கர்கவன் ஜில்லா பரிஷத் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 5 வரையிலான வகுப்புகளில், அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சுமார் 50க்கும் அதிகமான குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.
அம்மாநில அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, கடந்த 1996ம் ஆண்டு முதல் மதிய சத்துணவு திட்டமாக கிச்சடி வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 1.25 கோடி மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.
அதன்படி இப்பள்ளியிலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழக்கம்போல், குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க கிச்சடி தயாரிக்கப்பட்டது. குழந்தைகளுக்கு பரிமாறுவதற்காக கிச்சடிப் பாத்திரத்தை திறந்து பார்த்தபோது, அதில் ஒரு பாம்பு இறந்து கிடந்ததைப் பார்த்து பள்ளி ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். இதனால் குழந்தைகளுக்கு அந்த உணவை அவர்கள் வழங்கவில்லை. இதனால் குழந்தைகள் பசியுடனே வீட்டுக்கு திரும்பினர்.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறைக்கு தகவல் சென்றது. பாம்பு கிடந்த கிச்சடியை அப்பகுதியில் உள்ள அரசு சாரா நிறுவனம் தயார் செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக குழு அமைத்து பள்ளிக்கல்வித் துறை விசாரணை நடத்தி வருகிறது.
தக்க நேரத்தில் கிச்சடியில் பாம்பு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.