கண்டுகொள்ளப்படாத லோக்பால்.. களம் இறங்கும் அண்ணா ஹசாரே.. அக்.2 முதல் உண்ணாவிரதம் அறிவிப்பு
மும்பை: பல்வேறு போராட்டங்களுக்கு பின் ஏற்படுத்தப்பட்ட லோக்பால் அமைப்பில் முறையான புகார் அளிக்கும் முறையோ, உரிய படிவமோ வரையறுக்கப்படாமல், உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசை விமர்சித்துள்ள சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே, இந்த விஷயத்தில் மத்திய அரசு வேண்டுமென்றே தாமதிப்பதாக கூறியதுடன் மத்திய அரசுக்கு எதிராக அக்டோபர் 2 முதல் உண்ணாவிரதத்தை தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான ராலேகன் சித்தி கிராமத்தில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட உள்ளதாக அண்ணா ஹசாரே கூறியுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியின் போது 2011ல் ஊழலுக்கு எதிராக லோக்பால் அமைப்பை ஏற்படுத்தி கண்காணிக்க கோரி அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். இந்த போராட்டம் இந்தியாமுழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பின்னர் லோக்பால் மசோதாவை நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தில் 2013ம் ஆண்டு டிசம்பரில் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 2014 ஜனவரியில் குடியரசுத் தலைவர் கையெழுத்தும் இட்டார்.
கரூர் விவசாயி மகள்...ஐஏஎஸ் கனவு...சாதித்த அபிநயா!!
உயர் அதிகாரிகள் விசாரணை
இதன்படி பிரதமர், மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் வகையிலான லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டது.
தேசிய அளவில் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் வகையில் லோக்பால் அமைப்பும், மாநில அளவில் முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களுக்குத் தீர்வு காணும் வகையில் லோக் ஆயுக்தா அமைப்பும் ஏற்படுத்தப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர்
இந்நிலையில் இந்த அமைப்பிற்கான தலைவரை தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், இந்தியாவின் தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர், மிகப்பெரிய எதிர்க்கட்சியின் தலைவர் ஆகியோர் உள்ளனர். இதில் லோக்சபாவில் போதிய பலத்துடன் எதிர்க்கட்சி என்பது இல்லை என்று கூறி லோக்பால் உறுப்பினர் நியமனத்தை மத்திய அரசு தாமதித்து வந்தது.
லோக்பால்
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அளித்த தீர்ப்பில்,. மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் உள்ளிட்ட உத்தேச திருத்தங்கள் பாராளுமன்றத்தால் அகற்றப்படும் வரை லோக்பால் சட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்துவதற்கு எந்த நியாயமும் இல்லை என்று கூறியது.
லோக்பால் தலைவர் பதவியேற்பு
இந்நிலையில் உச்சநீதிமன்றம், தலைமைத் தேர்தல் ஆணையத்தைப்போல் தன்னாட்சி அதிகாரமிக்க லோக்பால் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் கடந்த நிலையில், கடந்த ஆண்டுதான் அதன் தலைவர் நியமிக்கப்பட்டார். லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பினாஜி சந்திர கோஷ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23-இல் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முறையாக செயல்படவில்லை
இதேபோல், லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் திலீப் பி. போஸ்லே, பிரதீப் குமார் மெஹந்தி, அபிலாஷா குமாரி, அஜய்குமார் திரிபாதி உள்ளிட்ட 8 பேர் அதே ஆண்டு மார்ச் 27-இல் பதவியேற்றுக் கொண்டனர். நீதித் துறையைச் சாராத 4 உறுப்பினர்கள் என்ற விதிமுறையின் அடிப்படையில், சஷாஸ்திர சீமாபல் முன்னாள் தலைவர் அர்ச்சனா ராமசுந்தரம், மகாராஷ்டிர மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் தினேஷ்குமார் ஜெயின், ஐஆர்எஸ் அதிகாரி மகேந்திரசிங், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி இந்திரஜித் கௌதம் ஆகியோர் உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொண்டார்கள். ஆனால் லோக்பால் சட்டம் நிறைவேறி 6 ஆண்டுகளான போதிலும், அந்த அமைப்பு திறம்பட செயல்படுவதற்கான புகார் அளிக்கும் முறையோ, விசாரணைப் பிரிவோ, முதல்நிலை விசாரணை மேற்கொள்வதற்கு ஒழுங்கு முறை விதிகள் ஏற்படுத்தப்படவில்லை.
வேண்டுமென்றே தாமதம்
இந்நிலையில் பல்வேறு போராட்டங்களுக்கு பின் ஏற்படுத்தப்பட்ட லோக்பால் அமைப்பில் முறையான புகார் அளிக்கும் முறையோ, உரிய படிவமோ வரையறுக்கப்படாமல், உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசை விமர்சித்துள்ள சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே, இந்த விஷயத்தில் மத்திய அரசு வேண்டுமென்றறே தாமதிப்பதாக கூறியதுடன் மத்திய அரசுக்கு எதிராக அக்டோபர் 2 முதல் உண்ணாவிரதத்தை தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். ஊழலைக் கட்டுப்படுத்த இந்த அரசாங்கத்திற்கு விருப்பமில்லை. எனவே இது பல காரணங்களைத் கூறுகிறது. லோக்பால் அமைப்பு செயல்படுவதை தாமதப்படுத்துகிறது" என்று ஹசாரே குற்றம்சாட்டி உள்ளார். தனது போராட்டத்தில் மக்கள் இணைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.