பரபரப்பான சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கு.. டிச. 21ல் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!
Recommended Video
மும்பை: சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் டிசம்பர் 21ஆம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது.
2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், குஜராத் மாநிலத்தின் காந்தி நகர் அருகே, அம்மாநில போலீசாரால் சோராபுதீன் ஷேக் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
சில தினங்களில் அவரது மனைவி கவுசர் பீ பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். சொராபுதீன் ஷேக் கூட்டாளி மற்றும் இந்த என்கவுண்டர் வழக்கில் நேரடி சாட்சியமாக துளசிராம் பிரஜாபதி அடுத்த ஆண்டில், போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இவ்வாறு நடைபெற்ற அடுத்தடுத்த என்கவுண்டர் சம்பவங்கள் போலியானவை என்று மனித உரிமை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு எழுப்பினர். அப்போது, குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
அமித் ஷா உள்ளிட்ட சிலர் 2014ஆம் ஆண்டு இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை மும்பையிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
கடந்த திங்கட்கிழமை முதல் சிபிஐ தரப்பு தனது இறுதி வாதத்தை எடுத்து வைத்தது. பல சாட்சிகள் பிறழ் சாட்சியங்களாக மாறியபோதிலும் அதை கருத்தில் கொள்ளாமல் அவர்கள் ஏற்கனவே கொடுத்த சாட்சியத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், நடைபெற்றது போலி என்கவுண்டர் தான் என்றும் சிபிஐ தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
ஆனால் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகள் தரப்பில் இந்த வழக்கின் விசாரணை முறையாக நடைபெறவில்லை என்று வாதம் வைக்கப்பட்டது. இந்த பரபரப்பான வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 21ஆம் தேதி வழங்கப்படும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.