குஜராத் போலி என்கவுண்டர் வழக்கு.. பஸ் டிக்கெட்டை சுட்டிக்காட்டி நீதிபதி கிடுக்கிப்பிடி!
Recommended Video
மும்பை: குஜராத்தில் நடந்த போலி என்கவுண்டர் வழக்கில், சரியாக விசாரணை நடைபெறவில்லை என்று, சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார். கொலையான மூவரின் பஸ் டிக்கெட்கள் மீது நீதிபதி சந்தேகம் எழுப்பியுள்ளார்.
குஜராத்தில் நடந்த சொராபுதீன் ஷேக் மற்றும் துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்குகள் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சிபிஐ தரப்பு தனது இறுதிவாதத்தை முன்வைத்து வருகிறது. நீதிபதி எஸ்.ஜே.ஷர்மா முன்னிலையில், சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.பி.ராஜு திங்கள்கிழமை முதல் வாதத்தை முன் வைத்து வருகிறார்.
அப்போது இந்த வழக்கின் விசாரணையில் கோட்டைவிடப்பட்டுள்ளதாக நீதிபதி கடிந்து கொண்டார். சிபிஐ விசாரணையில் மட்டுமல்ல, அதற்கு முன்பாக, குஜராத் தீவிரவாத எதிர்ப்பு படை மற்றும் சிஐடி காவல்துறையினர் நடத்திய விசாரணையிலும் பல ஓட்டைகள் இருப்பதாக நீதிபதி சுட்டிக் காட்டினார். 2005ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி, சொராபுதீன் ஷேக் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், 2010ம் ஆண்டு சிபிஐக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.
210 சாட்சியங்களில், 92 சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்களாக மாறிவிட்டன. சிபிஐயின் விசாரணையில், என்கவுண்டர் வழக்குகளில் குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா, தீவிரவாத எதிர்ப்பு படை தலைவர் வன்சரா, துணை எஸ்பி ராஜ்குமார் பாண்டியன் மற்றும் உதய்ப்பூர் எஸ்பி தினேஷ் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றிருந்தபோதிலும், வழக்கிலிருந்து இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சொராபுதீன் ஷேக் கூட்டாளி துளசிராம் பிரஜாபதி 2006ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். குஜராத்திலிருந்து ராஜஸ்தானுக்கு துளசிராமை போலீசார் அழைத்து சென்றபோது தப்ப முயன்றதாகவும் அப்போது, போலீசார் என்கவுண்டர் செய்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருந்தது.
சிபிஐ தரப்பு தனது வாதத்தில், குஜராத்திலிருந்து துளசிராமை போலீசார் ரயிலில் கூட்டிச் செல்லவில்லை என கூறப்பட்டது. அப்படியானால் அவர் எப்படி அழைத்துச் செல்லப்பட்டார் என்று நீதிபதி கேட்டார். இந்த கோணத்தில் விசாரணை செய்யவில்லையா என்று கேட்டார்.
துளசிராம், அதிகாரி வன்சராவிற்கு கொடுத்த ஆதாரங்கள் எங்கே என்று, நீதிபதி கேள்வி எழுப்பினார். சொராபுதீனை கொன்றது போலி என்கவுண்டர் மூலமாகத்தான் என்று சிபிஐ தரப்பு வாதிடும்போது குறிக்கிட்ட நீதிபதி, போலி என்கவுண்டர்தான் என்பதை நிரூபிக்க நீங்கள் என்ன முயற்சி எடுத்தீர்கள் என பதில் கேள்வி எழுப்பினார்.
சொராபுதீன், துளசிராம் மற்றும் கவுசர் பீ ஆகியோர் ஒரே பஸ்சில் பயணித்தபோது, தீவிரவாத எதிர்ப்பு படையால் அழைத்துச் செல்லப்பட்டதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒரே பஸ்சில் பயணித்ததை நிரூபிக்க டிக்கெட் ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார்.
தெலுங்கானா மாநில எல்லையில் வைத்து 2005ம் ஆண்டு, நவம்பர் 22ம் தேதி சொராபுதீன் ஷேக், அவரது மனைவி கவுசர் பீ மற்றும் சொராபுதீன் கூட்டாளி துளசிராம் பிரஜாபதி ஆகியோரை தீவிரவாத எதிர்ப்பு படையினர் கடத்தியுள்ளனர்.
தீவிரவாத எதிர்ப்பு படை தலைவர் வன்சரா கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, துளசிராம் தாங்கள் இருக்கும் இடம் குறித்து தகவல் கொடுத்ததாகவும், அந்த தகவல் அடிப்படையில் சொராபுதீன் உள்ளிட்டோரை தீவிரவாத எதிர்ப்பு படை கடத்தி வந்ததாகவும் சிபிஐ விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், துளசிராம், வன்சாராவிற்கு கொடுத்த தகவல்கள் அடங்கிய ஆதாரம் எங்கே உள்ளது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
சிபிஐ வழக்கறிஞர் பி.பி.ராஜு வாதிடும்போது, சொராபுதீனிடம் பஸ் டிக்கெட் இருந்ததை போல ஜோடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் என்கவுண்டரில் உண்மைத் தன்மை இருப்பதை போல காண்பிக்க முயற்சி நடந்துள்ளது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, நீங்கள் இதை போலியானது, திட்டமிட்டது என்று சொல்கிறீர்கள்.. அப்படியானால் பஸ் டிக்கெட்டை வாங்கி ஜோடித்தது யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்தீர்களா? 38 பேர் இதில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உங்களிடம் சிக்கியுள்ளனர். அவர்களிடம் இதுபற்றி விசாரித்தீர்களா?
துளசிராம், சொராபுதீன் மற்றும் கவுசர் பீதியுடன் அதே பஸ்சில் பயணித்ததாக சிபிஐ கூறுகிறது. விசாரணையின்போது, சிபிஐ தனது விசாரணையின்போது, பஸ் டிக்கெட் யாரிடமிருந்து வாங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தியுள்ளது.. ஆனால், மூவருக்கான டிக்கெட்டுகள், ஏன் வெவ்வேறு நபர்களிடமிருந்து வாங்கப்பட்டது என்பதற்கான விளககம் இல்லை. சொராபுதீன், துளசிராம் மற்றும் கவுசர் பீ ஆகிய மூவரும், ஒரே பஸ்சில் சென்றால் ஏன் தனித்தனி நபர்களிடம் டிக்கெட் வாங்கப்பட்டது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.