ஒரே மாதிரி..விவசாயிகளுக்கு எதிராக எப்படி ட்வீட் போட்டீங்க? "பொம்மலாட்டம்.." கொதிக்கும் சக பிரபலங்கள்
மும்பை: விவசாயிகள் பிரச்சனையில், பிற நாட்டினர் தலையிடக்கூடாது என்று கூறும் கருத்துடன் ஒரே மாதிரி வரிகளுடன் டுவிட்டரில் பதிவுசெய்து சர்ச்சையில் சிக்கியுள்ளனர் பாலிவுட் முன்னணி நடிகர்கள் அக்ஷய் குமார் மற்றும் அஜய் தேவ்கன்.
பாலிவுட்டில் உள்ள சக கலைஞர்களான டாப்சி பன்னு, சோனாக்ஷி சின்கா உள்ளிட்ட பலர், இவர்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக சர்வதேச பாடகி ரிஹானா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். ஸ்வீடன் நாட்டின் சுற்றுச்சூழல் ஆர்வலரான 18 வயதாகும் கிரெட்டா துன்பெர்க், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் சகோதரி மகள் மீனா ஹாரிஸ் உள்ளிட்டோரும் இந்திய விவசாயிகள் பிரச்சினை பற்றி பேசியிருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ,ரோஹித் சர்மா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள், இது உள்நாட்டு பிரச்சினை என்றும், வெளிநாட்டினர் தலையிடக்கூடாது என்றும் டுவிட்டர் பதிவில் தெரிவித்து இருந்தனர்.
சக்கா ஜாம்: டெல்லி தவிர நாடு முழுவதும் ஸ்தம்பிக்க செய்ய விவசாயிகள் அழைப்பு
சச்சின், விராட் கோலி
வெறும் கிரிக்கெட் வீரர்கள் மட்டும் கிடையாது. பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மற்றும் அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலரும் இதே போன்ற கருத்துடன் ட்விட்டர் பதிவு செய்தனர். இதில் #IndiaTogether and #IndiaAgainstPropaganda போன்ற ஹேஷ்டேக்குகள், ஒரே மாதிரியாக பயன்படுத்தியிருந்தனர்.
சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, லதா மங்கேஷ்கர், கரண் ஜோகர் உள்ளிட்டோரும் அதேபோன்ற ஹேஷ்டேக்கையே பயன்படுத்தினர். இவை அனைத்துமே "தவறான பிரச்சாரங்களுக்கு நீங்கள் காது கொடுக்க வேண்டாம் சுமுகமான தீர்வு காணுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்திருந்தன.
டாப்சி பன்னு நறுக்
இதுவரை விவசாயிகள் பிரச்சினைக்கு, குரல் கொடுக்காமல் இருந்து வந்த இவர்கள் திடீரென ஒரே நாளில் ஒரே மாதிரியே ட்விட்டர் பதிவு செய்வதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று பாலிவுட் திரையுலக பிரமுகர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். நடிகை டாப்சி பன்னு, தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருபவர். அவர் கூறுகையில் ஒரு ட்விட்டர் பதிவு உங்களது ஒற்றுமையை பாதித்துவிடும் என்றால், ஒரு ஜோக் உங்களது நம்பிக்கையை கெடுத்து விடும், என்றால் ஒரு ஷோ உங்களது மத நம்பிக்கைகளை புண்படுத்தி விடும் என்றால், நீங்கள்தான் உங்களை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். அதை விடுத்து பிறருக்கு பாடம் எடுக்காதீர்கள் என்று நச்சென கருத்து தெரிவித்தார்.
சோனாக்ஷி சின்கா குட்டி ஸ்டோரி
அக்ஷய் குமாருடன் நிறைய படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர் சோனாக்ஷி சின்கா. இவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குட்டி கதையை மேற்கோளிட்டு கருத்து கூறியுள்ளார். அதில், மனித உரிமை மீறல், சுதந்திரமான பேச்சுரிமை மற்றும் இணையதள சேவை முடக்கம், வெறுப்பு பேச்சு, அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுவது உள்ளிட்டவற்றுக்கு எதிராக சர்வதேச பிரபலங்கள் குரலெழுப்பி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவர் பதிவு செய்துள்ள மற்றொரு கதையில், இது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை என்ற வாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பிரச்சினையை பற்றி பேசுபவர்கள் ஏலியன்கள் கிடையாது. சக மனிதர்கள்தான். பிற மனிதர்களின் உரிமைகள் பற்றி சக மனிதர்கள் பேசுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே மாதிரி எப்படி
காமெடி நடிகர் வீர் தாஸ் கூறுகையில், ரிஹானா மற்றும் கிரெட்டா துன்பெர்க் ஆகியோரின் ட்விட்டர் பதிவு எப்படி இந்தியர்களை 'ஒருங்கிணைத்தது' என்று ஆச்சரியமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். ரிஹானா அல்லது கிரெட்டா துன்பெர்க் ஆகியோருக்கு இந்திய விவசாயிகள் பற்றி மேலோட்டமாக மட்டும் தான் தெரியும் என்று நான் நம்புகிறேன். ஆனால் அதே நேரம் அவர்கள் வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவு காரணமாக ஒரே நேரத்தில் ஒரே மாதிரி பிரபலங்கள் ட்விட்டரில் பதிவு செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் அரசின் கரங்களில் எப்படி பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை இது உணர்த்துகிறது என்றார்.
பொம்மலாட்டம் மாதிரி இருக்கு
இதேபோலத்தான் இயக்குனர் ஓனிர் கூறுகையில், பாலிவுட் நட்சத்திரங்கள் வழங்கும் இந்த ஒருமித்த ஆதரவை பார்க்கும்போது, பாவைக்கூத்து எனப்படும், பொம்மலாட்டம் நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது என்று தெரிவித்துள்ளார். பொம்மலாட்டம் என்பது மேலே இருந்து ஒருவர் இயக்க.. கீழே இருக்கும் பொம்மைகள் அவரது இயக்கத்துக்கு ஏற்ப ஆடக்கூடிய ஒரு பாரம்பரிய பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும். "பிரபலங்கள் அனைவருமே ஒரே மாதிரி மெசேஜ்களை டுவிட் செய்துள்ளனர். ஒரு சில வார்த்தைகள் மட்டும் மாறியுள்ளது. அவர்களுக்கு என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதை செய்துள்ளார்கள். இதை பார்த்தால் பொம்மலாட்ட நிகழ்ச்சி போல இருக்கிறது" என்று கிண்டல் செய்துள்ளார் ஓனிர்.
அசல் கருத்து இல்லை
பிரபலங்களின் நகை டிசைனர் பாரா அலி கான் கூறுகையில், ஒரே மாதிரியாக இப்படி பிரபலங்கள் டுவிட் பதிவு செய்வது ஏதோ மார்க்கெட்டிங் செய்வது போல இருக்கிறது. என்னதான் காரணமாக இருக்கட்டுமே. ஆனால் உங்களது கருத்து, அசல் கருத்தாக இருக்கவேண்டும். இப்போது உங்களை நீங்களே தாரை வார்த்து விட்டீர்கள். உண்மையான ஹீரோக்கள் மற்றும் சினிமா ஹீரோக்கள் இடையேதான் இப்போது போட்டி உருவாகியுள்ளது. இதுதான் இந்திய நிலவரம் என்று தெரிவித்துள்ளார்.
சோம்பி படம் மாதிரி
சயானி குப்தா கூறுகையில், 'அய்யோ! பக்தர்கள் விழித்துவிட்டார்கள்! . சோம்பி திரைப்படங்களின் கிளைமாக்ஸில் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியும். யாராவது மனிதர்கள் இருக்கிறார்களா என்று சோம்பி பார்க்கும். ஒருவர் அந்தப் பக்கமாக நடந்து செல்வது தெரிந்தாலும் அவ்வளவுதான். கதை முடிந்தது. அதைப் போன்ற உணர்வை தான், நான் இப்போது பெற்றேன், என்று தெரிவித்துள்ளார்
முதுகெலும்பற்ற பிரபலங்கள்
முதுகெலும்பற்ற பிரபலங்கள் 'மேட் இன் ஹெவன்' நடிகர் அர்ஜுன் மாத்தூர் பிரபலங்களை கேலி செய்ய ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி 'முதுகெலும்பு இல்லாத செயல்' என்பதை சுட்டிக் காட்டினார், இது சமூக ஊடகங்களில் 'ஸ்பைன்லெஸ் பிரபலங்கள்' ( 'Spineless Celebs') என்ற பெயரில் பிரபலமாகிவிட்டது. "எங்கள் முழுமையான முதுகெலும்பு இல்லாதனத்தை காட்டுகிறோம், பாருங்கள். எங்கள் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் வருமானத்தைப் பாதுகாப்பதற்காக, எங்களை கடவுளாகக் கருதிய வெகுஜனங்களுக்கு எதிராக, இந்த ராணுவ பாணியிலான அணிதிரட்டலுக்காக நாங்கள் ஒன்றிணைந்து நிற்போம். மகிழுங்கள். எந்த விவேகமான அல்லது மனிதாபிமானக் குரலும் இதில் தலையிடக் கூடாது, உங்களை பாதிக்கவோ கூடாது." என்று ஆதங்கத்தோடு தெரிவித்துள்ளார்.
கடவுளாக நினைத்தீர்களே
நடிகர் மற்றும் டிவி தொகுப்பாளரான சுஷாந்த் சிங், திரையுலகில் இருந்து அரசுக்கு வழங்கிய ஆதரவால் மனம் உடைந்து போனதாகக் கூறியுள்ளார்: 'படங்களில் ஹீரோக்கள் அல்லது கதாநாயகிகளாக இருப்பவர்களை ஏன் உங்கள் கடவுளாக நினைக்கிறீர்கள்? இப்போது மனது உடைந்து விட்டது... ' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.