பொருளாதார வல்லுநர்களை பயமுறுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.. மோடிக்கு சு.சுவாமி அட்வைஸ்!
Recommended Video
மும்பை: பொருளாதார வல்லுநர்களை பயமுறுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என பிரதமர் மோடிக்கு பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி அறிவுரை வழங்கியுள்ளார்.
மும்பையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் சுப்பிரமணியன் சுவாமி பேசுகையில் மோடி அரசில் மிகச் சிலரால் மட்டுமே தனித்து செயல்பட முடியும். எது தேவை, எது வேண்டாம் என்பதை முகத்திற்கு நேராகச் சொல்பவர்களை பிரதமர் மோடி ஊக்குவிக்க வேண்டும். ஆனால் அவர் அந்த மனநிலையை வளர்த்துக் கொள்ளவில்லை.
குறுகிய காலத்துக்கும் நடுத்தர காலத்துக்கும் நீண்ட காலத்துக்கும் செயல்படும் விதமான திட்டம் நமது பொருளாதாரத்துக்கு தேவைப்படுகிறது. ஆனால் அதற்கான ஒரு கொள்கை நம்மிடம் இல்லை. அதுமட்டுமல்லாமல் பிரதமர் உண்மையை உரக்கச் சொல்ல அரசால் நியமிக்கப்பட்ட பொருளாதார நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
பொருளாதார முன்னேற்றம்
பிரதமர் மோடி சிறிய திட்டங்களான உஜ்வாலா உள்ளிட்ட திட்டங்களில் கவனம் செலுத்துகிறார். அதைவிட்டுவிட்டு பொருளாதார முன்னேற்றத்துக்கு பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய பலதரப்பு அணுகுமுறை தேவைப்படுகிறது.
மன்மோகன் சிங்
1991-ஆம் ஆண்டு பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள மன்மோகன் சிங் தலைமையில் நிதி அமைச்சகத்தின் மூலம்தான் பிவி நரசிம்மராவ் சிறப்பாக செயல்பட்டார். அதற்காக பொருளாதாரத்தில் தலைச்சிறந்த வல்லுநர்களே பிரதமராக வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதற்கு உதாரணமாக மன்மோகன் சிங்கையே சொல்லலாம்.
பாரத ரத்னா விருது
அவர் நிதி அமைச்சராக இருந்த போது செய்த பொருளாதார சீர்திருத்தங்களை பிரதமரானவுடன் செய்ய முடியவில்லை. 1991- ஆம் ஆண்டு பொருளாதார சீர்திருத்தங்களில் 95 சதவீதம் பங்கு ராவுக்கு உண்டு. எனவே மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.
கோரிக்கை
ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெறாத மாணவனாக ப.சிதம்பரத்தை தெரியும். அதை தவிர்த்து ஒன்றும் தெரியாது. வருமான வரியை ரத்து செய்வதற்கான கோரிக்கையை நான் மீண்டும் முன்வைக்கிறேன்.
பணக்காரர்கள்
பணக்காரர்கள், ஏழைகள், விவசாயிகள் வரி செலுத்துவதிலிருந்து விலகி இருக்கும் போது நடுத்தர மக்கள் அதிக நுகர்வு திறன் காரணமாக பொருளாதாரத்தின் முக்கியமானவர்களாக இருந்த போதிலும் அதிகபட்ச வரிச் சுமையை தாங்குகிறார்கள் என்றார் சுப்பிரமணியன் சுவாமி.