நடிகர் சுஷாந்த் மரணம் கவரேஜ்: ரிபப்ளிக், டைம்ஸ் நவ் சேனல்களை வறுத்தெடுத்த நீதிமன்றம்
மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் தொடர்பான வழக்கில் ரிபப்ளிக், டைம்ஸ் நவ் டிவி சேனல்கள் ஒரு நீதிபதி போல் செயல்பட்டிருப்பதாக மும்பை உயர்நீதிமன்றம் விமர்சித்துள்ளது.
முன்னணி ஹீரோ எனும் அந்தஸ்தை நோக்கி மிக வேகமாக முன்னேறி வந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் சினிமா உலகத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த மக்களின் மனங்களையும் உலுக்கியது.
அவரது தற்கொலைக்கு பல காரணங்கள் வதந்திகளாகவும், காற்று வாக்கிலும் பலரால் அள்ளி வீசப்பட்டன. அதில் குறிப்பாக, பாலிவுட்டில் நிலவும் 'வாரிசு நடிகர்களின் ஆதிக்கம்' தான் காரணம் என்று நடிகை கங்கனா ரணாவத் மிக வெளிப்படையாகவே குற்றச்சாட்டை முன் வைத்தார்.
அதைத் தொடர்ந்து பல பிரபலங்களும் இதே காரணத்தை சொல்லி, சுஷாந்த்தின் மரணமும் அதனால் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்ற ரீதியிலேயே கருத்து தெரிவித்து வந்தனர்.
குறிப்பாக கரண் ஜோஹர், ஆலியா பட் உள்ளிட்ட சில வாரிசு பிரபலங்கள் மீது கடும் விமர்சனங்கள் எழ, அதுகுறித்த ஹேஷ்டேக்குகள் உலக அளவில் டிரெண்டாகின.
இதில் அதிர்ச்சி என்னவெனில், சில ஊடகங்களும் சுஷாந்த் தற்கொலை குறித்த செய்தியை வரம்பை மீறி பதிவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. சமூக தளங்களில் வைக்கப்படும் யூகங்களும், வதந்திகளுமே தேவலை எனும் அளவுக்கு சில மீடியாக்களின் செய்திப் பதிவுகள் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
சுஷாந்த் சிங்கின் மரணம் தற்கொலைதான்.. கொலை என்ற பேச்சுக்கே இடம் இல்லை.. எய்ம்ஸ் மருத்துவர்
இந்நிலையில், டைம்ஸ் நவ் மற்றும் ரிபப்ளிக் டிவி ஆகிய சேனல்கள், சுஷாந்த் சிங் மரணம் குறித்த வழக்கில் நீதித்துறையின் நிர்வாகத்தில் தலையிட்டு, அதனை அவமதிப்பது போல் செயல்பட்டுள்ளது என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை வழக்கில் "ஊடக விசாரணைக்கு" எதிராக தடை கோரி மகாராஷ்டிராவைச் சேர்ந்த முன்னாள் காவல்துறை அதிகாரிகள், ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த பொதுநல மனுக்கள் மீதான உத்தரவில், தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி கிரிஷ் எஸ் குல்கர்னி ஆகியோரின் பெஞ்ச் இவ்விரு டிவி சேனல்களும் மீதும் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்தது.
இதுகுறித்து நீதிமன்றம் தனது தீர்ப்பில், "சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போது, "ஊடகங்களின் விசாரணை" என்பது நீதியின் நிர்வாகத்தில் தலையிடுவதாகும். இது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும். இந்த வழக்கில் டைம்ஸ் நவ் மற்றும் ரிபப்ளிக் டிவி ஆகியவை ஒரு புலனாய்வாளராகவும், தன்னை ஒரு அரசு வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் கருதி செய்திகளை வெளியிட்டுள்ளது" என்று காட்டமாக விமர்சித்துள்ளது.
மேலும், "எந்தவொரு வழக்கின் விசாரணையும் நிலுவையில் உள்ள போது, இதுபோன்ற 'ஊடக விசாரணை' கேபிள் டிவி நெட்வொர்க் ஒழுங்குமுறை சட்டத்தை மீறுவதாக உள்ளது.
Press Council of India-வின் வழிகாட்டுதல்களை டிவி சேனல்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிமன்றம், இவ்விரு சேனல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து, "எதிர்காலத்தில் அவர்கள் மிகவும் பொறுப்புடன் செயல்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளது.