மன அழுத்தத்திற்கு சிகிச்சை எடுத்த சுஷாந்த்.. டாக்டர் பரிந்துரைத்த மாத்திரைகளை எடுத்து கொள்ளாதது ஏன்?
மும்பை: மனஅழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நடிகர் சுஷாந்த் சிங் அதற்கான மாத்திரைகளை எடுத்து கொள்ளவே இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
Recommended Video
34 வயதான பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தனது குடும்ப உறுப்பினர்களை பாட்னாவில் விட்டுவிட்டு மும்பை பாந்த்ராவில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார். இவர் கடைசியாக நேற்று காலை 10 மணிக்கு ஒரு டம்ளர் ஜூஸ் குடித்துவிட்டு தனது படுக்கை அறையில் சென்று உள்பக்கமாக பூட்டிக் கொண்டார்.
பின்னர் அவரது வீட்டில் பணி செய்யும் நபர் காலிங் பெல்லை அடித்தும் அவர் திறக்கவே இல்லை. இதையடுத்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து சுஷாந்த் வீட்டின் கதவை பகல் 12.30 மணிக்கு உடைத்தனர்.
வெள்ளை உடையில் வந்தார்.. சுஷாந்த் தற்கொலை.. ரியாவிடம் துருவி துருவி விசாரிக்கும் போலீஸ்.. யார் இவர்?
இந்துஜா மருத்துவமனை
அப்போது அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. ராஜவம்சத்தை சேர்ந்த அவரின் தற்கொலைக்கு என்ன காரணம் என தெரியவில்லை. அங்கு தற்கொலைக்கான கடிதம் எதையும் போலீஸார் கைப்பற்றவில்லை. அவருக்கு மன அழுத்தம் இருந்ததால் கடந்த 6 மாதங்களாக மும்பை இந்துஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
என்ன காரணம்
இந்த நிலையில் அவர் மன அழுத்தத்திற்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக் கொள்ளவில்லை என தெரிகிறது. மன அழுத்தத்திற்கு சிகிச்சை எடுத்து அதற்கான மருந்துகளை சாப்பிடாமல் இருந்தது ஏன் என்றும் அவரது மன அழுத்தத்திற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை.
விசாரணை
தடயவியல் துறையை சேர்ந்த 3 பேர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவரது படுக்கை, சுவர், கதவுகளில் சந்தேகத்திற்குரிய வகையில் கைரேகைகள் இருக்கின்றனவா என ஆய்வு செய்தனர். அது போல் குற்றவியல் துறை போலீஸாரும் சுஷாந்த் வீட்டில் விசாரணை நடத்தினர்.
இறுதிச் சடங்குகள்
இவரது இறப்புக்கு திரைப்பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். கடந்த வாரம் தன் தாயை எண்ணி உருகிய சுஷாந்த் இன்று தாயை தேடியே போய்விட்டார் என நடிகர், நடிகர்கள் ட்விட்டரில் வேதனை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இவருக்கு இன்று பிற்பகல் 3 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ கீழே உள்ள 24 மணி நேர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு மையம்- 044- 2464 0050
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம்- 104- ஐ அழைக்கலாம்.