மோசமான உடல் நிலை.. சமூக செயற்பாட்டாளர் வரவர ராவ், சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றம்
மும்பை: மகாராஷ்டிராவில் 2018ஆம் ஆண்டு நிகழ்ந்த வகுப்புவாத வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் வரவர ராவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து சிறையில் இருந்து மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பேஷ்வாக்களுக்கு எதிராக தலித்துகள் பெற்ற வெற்றியின் 200வது ஆண்டு கொண்டாட்டம் 2018 ஜனவரி 1ஆம் தேதி புனே அருகே உள்ள பீமா-கோரேகானில் நடந்தது. இந்த கொண்டாட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் ஒருவர் மரணம் அடைந்தார். பலர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறி 81 வயதாகும் சமூக செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான வரவர ராவ் உள்பட ஐந்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக மும்பையின் தலோஜா சிறையில் உள்ள வரவர ராவ் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டது. இதனால் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டுமென்றும் அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் உடல்நலம் மோசமடைந்து வருவதால், வரவர ராவ்க்கு மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்யுமாறு கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கான மக்கள் அதிகாரிகளை வலியுறுத்தினர்.
இதையடுத்து மும்பையில் உள்ள சர் ஜே.ஜே. மருத்துவமனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சர் ஜே.ஜே. மருத்துவமனை டீன் டாக்டர் ரஞ்சீத் மங்கேஷ்வர் இந்த தகவலை உறுதி செய்தார்.
"பிரதமரே வந்தாலும் இதுதான்".. அமைச்சர் மகனை லெப்ட் ரைட் வாங்கிய போலீஸ் சுனிதா.. கட்டாய ராஜினாமாவா?
தெலங்கானாவை சேர்ந்த பெண்டியாலா வரவர ராவ் இடதுசாரி கருத்துகளையும் கொண்ட எழுத்தாளர், கவிஞர் ஆவார். .தெலுங்கானாவில் 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் நடைபெற்ற மோதல் சம்பவங்கள் குறித்த வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் ஆவார். இவர் தான் 2002ம் ஆண்டு மாவோஸ்ட்டுகளுக்கும் ஆந்திர அரசுக்கும் இடையே சண்டை நிறுத்தத்திற்கு மத்தியஸ்தராக இருந்தார்.