மக்களவை துணை சபாநாயகர் பதவி வேண்டுமென்பது கோரிக்கையல்ல.. எங்கள் உரிமை.. சிவசேனா கருத்து
மும்பை: மக்களவை துணை சபாநாயகர் பதவி தங்களுக்கே அளிக்கப்பட வேண்டும் என சிவசேனா கட்சி கூறியுள்ளது. இது தொடர்பாக மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் இதனை வலியுறுத்தியுள்ளார்.
17-வது மக்களவை துணை சபாநாயகராக பிஜு ஜனதாதள கட்சியை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிஜு ஜனதா தளம் பாஜகவின் கூட்டணி கட்சியில்லை. மேலும் அக்கட்சிக்கு 12 மக்களவை உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். எனவே மக்களவை துணை சபாநாயகர் பதவி தங்களுக்கு தான் வேண்டும் என சிவசேனா பிடிவாதமாக உள்ளது.
மராட்டிய மாநிலத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தல்களில், பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பாஜக - சிவசேனா கூட்டணி, அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில், 41 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்று அசத்தியது. இதில் சிவசேனா 18 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் நாட்டின் 17-வது மக்களவையின் முதல் கூட்டம் வரும் ஜூன் 17-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் எம்.பி-க்கள் பதவியேற்று கொண்டவுடன், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெறும். பாஜக சார்பில் சபாநாயகர் பதவிக்கு சிலரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.
இந்நிலையில் மக்களவை துணை சபாநாயகர் பதவி வேண்டும் என்பது தங்கள் கோரிக்கை அல்ல. கூட்டணி கட்சி என்ற முறையில் அது தங்கள் உரிமை என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
சிவசேனாவிற்கு துணை சபாநாயகர் பதவி வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி கேட்கவே தேவையில்லை. கூட்டணி கட்சி என்ற முறையில் அப்பதவி இயற்கையாகவே எங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றார்.
மக்களவையில் எங்களுக்கு 18 உறுப்பினர்கள் உள்ளனர். எனவே மக்களவையில் துணை சபாநாயகர் பதவியை கேட்பதில் தவறேதுமில்லை என்றே நாங்கள் கருதுகிறோம் என குறிப்பிட்டார் சஞ்சய் ராவத். மேலும் பேசியுள்ள அவர், பாஜக தனித்து 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி தான்.
அதே சமயம் கூட்டணி கட்சிகளின் வெற்றியையும் பாஜக அங்கீகரிக்க வேண்டும். அதிகாரமிக்க துறைகளையும் எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணியில் மற்றொரு பிரதான கட்சியான ஐக்கிய ஜனதா தளம் அமைச்சரவையில் பங்கேற்க மறுத்தநிலையில், அக்கட்சியை சேர்ந்தவரை கடந்த சில மாதங்களுக்கு முன் மாநிலங்களை துணைத் தலைவராக நியனம் செய்யப்படதையும் சஞ்சய் ராவத் சுட்டிக்காட்டியுள்ளார்
மக்களவையில் 18 எம்பி-க்களை கொண்டுள்ள போதிலும் சிவசேனதாவிற்கு மத்திய அமைச்சரவையில் ஓரிடம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, அக்கட்சியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் துணை சபாநாயகர் பதவியை, தங்கள் கட்சிக்கே வழங்க வேண்டும் என சிவசேனா கோரி வருவது குறிப்பிடத்தக்கது.