விவசாயிகளுக்கு உதவாத வங்கிகளுக்கு எங்கள் பாணியில் பாடம் புகட்டுவோம்.. சிவசேனா எச்சரிக்கை
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடன் வழங்காத வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு, தங்கள் பாணியில் பாடம் புகட்ட போவதாக சிவசேனா கட்சி எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் பல மாநிலங்களில் வரலாறு காணாத வறட்சி நிலவி, கடும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கடும் வறட்சிக்கு வடமாநிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வறட்சியை சமாளிக்க பல்வேறு திட்டங்களை யோசித்து, அந்தந்த மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள விதர்பா மற்றும் மராத்வாடா உள்ளிட்ட பகுதிகள், வறட்சியின் கோரப்பிடியில் சிக்குண்டு தவித்து வருகின்றன. மராட்டியத்திலுள்ள ஆறு, குளங்கள் மற்றும் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் முற்றாக வறண்டதால், கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லை என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மகாராஷ்டிராவின் வறட்சி பாதித்த பகுதிகளுக்கு உத்தவ் தாக்கரே சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்கள் மற்றும் விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து வருகிறார். மேலும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உணவு தானியங்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை நிவாரணமாக அளித்து வருகிறார் சிவ சேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே வறட்சியால்.
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மராத்வாடா பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடையே பேசினார். அப்போது பேசிய அவர், சிவசேனாவின் முயற்சியால் தான் மராட்டிய மாநிலத்தில் விவசாயிகளின் கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கென பயிர் காப்பீட்டு திட்டம் ஒன்றை அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால் இதன் பலனை ஏராளமான விவசாயிகளால் பெற முடியவில்லை.
ஏனென்றால் விவசாயிகளுக்கு உதவ பல வங்கிகளுக்கும், இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும் துளியும் விருப்பம் இல்லை. உழவர்களுக்கு உதவ மறுக்கும் நிறுவனங்களும், வங்கிகளும் மும்பையில் இருந்து தான் செயல்பட்டு வருகின்றன.
மத்திய அமைச்சர்களுக்கு அதிரடி உத்தரவு... வேலையை காட்டும் பிரதமர் மோடி
எனவே உதவும் உள்ளங்கள் இல்லாத வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு, விரைவில் சிவசேனா பாணியில் தகுந்த பாடம் புகட்டப்படும் என எச்சரித்தார்.
மேலும் பேசிய அவர் உழவர்களுக்கு உதவ மறுத்த வங்கி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் தகவல்களையும், கடன் கிடைக்காத விவசாயிகளின் தகவல்களையும் சேகரிக்குமாறு தனது கட்சி தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர மக்களின் ஆசிர்வாதம் காரணமா தான் மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, நீர்பாசன திட்டங்களை நிறைவேற்ற தவறிவிட்டன.
மாநிலத்திற்கு தேவையான நீர்பாசன திட்டங்களை உரிய முறையில் நிறைவேற்றியிருந்தால், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள், ஓட்டுகளுக்காக மக்களிடம் சென்று கையேந்தும் நிலை ஏற்பட்டிருக்காது என்றார்.