அட கொடுமையே.. மகாராஷ்டிரா கொரோனா சிகிச்சை மையத்தில் பயங்கர தீ விபத்து.. 13 நோயாளிகள் உயிரிழப்பு!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Recommended Video
உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடம்.. 3,32,503 தினசரி பாதிப்புடன் புதிய உச்சம்!
தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு இருந்த நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கொரோனா ஆட்டம்
இந்தியா முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா தொடர்ந்து ஆட்டம் போட்டு வருகிறது. தினசரி பாதிப்பு 3,00,000-ஐயும், தினசரி உயிரிழப்பு 2,500-ஐயும் தாண்டி செல்கிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சிகிச்சையளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திண்டாடி வருகின்றன.
ஆக்சிஜன் தட்டுப்பாடு
மேலும் கொரோனா தொற்று அதிகரிப்பதால் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும், பல மாநிலங்களில் கொரோனா ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக மருத்துவமனை மூடப்பட்டுள்ளது.
தொடரும் விபத்துகள்
நாடு முழுவதும் கொரோனாவை தடுக்க தடுப்பூசிகள் போடப்பட்டு வந்த போதிலும் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. ஏற்கனவே தொற்றை தடுக்க முடியாமல் நாடு திண்டாடி வரும் நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆக்சிஜன் சப்ளை திடீரென நிறுத்தப்பட்டதால் 24 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மருத்துவமனையில் தீ விபத்து
இந்த சோகம் அடங்குவதற்குள் தற்போது வேறு ஒரு கோர விபத்து நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் அருகே வசாயில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. தீ கட்டுக்கடங்காமல் வேகமாக பரவியதால் அங்கு இருந்த நோயாளிகள் தீயின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டனர்.
13 நோயாளிகள் சாவு
இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் உடனடியாக விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனால் தீயில் சிக்கி 13 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு இருந்த நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.