ராகுல் இதை செய்யாததால் தான் தேர்தலில் காங்கிரஸ் தோற்றது.. பாபா ராம்தேவ் அருமை விளக்கம்
மும்பை: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்றதற்கு சூப்பர் விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார் யோகா குருவான பாபா ராம்தேவ். காங்கிரஸ் தலைவர் ராகுல், யோகாவிற்கு மதிப்பளித்து அதனை செய்யாததால் தான் மக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளார் என பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
நாளை சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இதற்கதாக மும்பையில் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்பதற்காக மும்பை வந்துள்ளார் யோகா குருவான பாபா ராம் தேவ்.
வந்த இடத்தில் தான் மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து வித்தியாசமான கருத்துகளை பதிவு செய்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாபா ராம் தேவ், யோகா என்பது கடவுளால் நேரடியாக ஆசீர்வதிக்கப்பட்ட கலையாகும்.
இந்த கலையை பிரதமர் மோடி நாள்தோறும் தவறாது செய்து வருகிறார். பொதுவெளியிலே மக்களோடு மக்களாக இருந்து யோகா செய்த முதல் பிரதமர் நரேந்திர மோடி தான்
அவர் யோகாவிற்கு மிகவும் மதிப்பளிக்க கூடியவராக உள்ளார். பிரதமர் மோடி மட்டுமல்லாமல் பாஜக-வை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ- க்கள் ஆகியோரும் தினமும் யோகா செய்து வருகிறார்கள்.
அதே போல காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர்களான ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி உள்ளிட்டோர் யோகாவை மதிக்க கூடியவர்களாக தான் விளங்கினர். வெளியே சொல்லாவிட்டாலும் நேரு, இந்திரா காந்தி ஆகியோர் தினமும் யோகா செய்வதை பின்பற்றி அதனை ரகசியமாகவும் வைத்திருந்தனர்.
ஆனால் அதற்கு பின்னர் வந்துள்ள அவர்களின் வாரிசுகள் யாருமே, யோகாவை மதிக்கவில்லை. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் யோகா கலைக்கு உரிய மதிப்பளிக்கவில்லை. அதனால் தான் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது என கூறியுள்ளார்.
மேலும் பேசிய பாபா ராம்தேவ் யோகா என்பது நமது மிகப்பெரிய சித்தாந்தம் ஆகும். யோகா கலையை நாம் அனைவரும் ராஷ்டிர தர்மமாக ஏற்க வேண்டும் என வலியுறுத்தினார்
உணவு கலப்படம் குறித்து பேசிய ராம்தேவ் சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இதற்கு கடுமையான சட்டங்கள் உள்ளன. குறிப்பாக சீனாவில் உணவில் கலப்படும் செய்யும் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வரை விதிக்கப்படுகிறது.
ஆனால் நம் நாட்டில் இதற்கு கடுமையான சட்டங்கள் இல்லை. எனவே குறைந்தது ஆயுள் தண்டனையாவது விதிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் நெய், மருந்துகள், சமையல் எண்ணெய் ஆகியவற்றில் கலப்படம் செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும் என வலியுறுத்தினார்
மக்களவை தேர்தல் தோல்வி குறித்து ஆராய காங்கிரஸ் சார்பாக குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் தோல்விக்கான காரணமாக யோகாவிற்கு மதிப்பளிக்காதது தான் என பாபா ராம்தேவ் கூறியிருப்பதை நாம் என்னவென்பது..!