அதிரும் மகாராஷ்டிரா.. விவசாய சட்டங்களுக்கு எதிராக.. தலைநகர் மும்பையை நோக்கி மாபெரும் பேரணி
மும்பை: சுமார் 21 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மகாராஷ்டிர தலைநகர் மும்பையை நோக்கி மாபெரும் பேரணியை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் மூன்று புதிய விவசாய சட்டங்களை அறிமுகப்படுத்தியது இந்த விவசாய சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகவுள்ளதாகக் கூறி, நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுக் கடந்த இரண்டு மாநிலங்களுக்கு மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிர் உட்பட பல்வேறு காரணங்களால் சுமார் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் பேரணி
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மகாராஷ்டிராவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்துகொள்ளும் மாபெரும் பேரணி நடைபெற்று வருகிறது. இதற்காக சுமார் 21 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் ஒன்றுகூடினர். அங்கிருந்து அவர்கள் தற்போது 180 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தலைநகர் மும்பையை நோக்கி பேரணியாக நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.
அதிரும் மகாராஷ்டிரா
இரு நகரங்களையும் இணைக்கும் சாலையில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடல் அலை போல சாரை சாரையாக வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த வீடியோக்களும் இணையத்தில் தற்போது வைராகியுள்ளது. இன்று மாலை இந்த பேரணி மும்பையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மீண்டும் மும்பையின் ஆசாத் மைதானத்தில் மற்றொரு பேரணியை நடத்த இவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த பேரணியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சரத் பவார் கருத்து
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும் விவசாய சட்டங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். தலைநகர் டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடும் விவசாயிகளின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொள்ளத் தவறினால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று எச்சரித்தார். மேலும், மத்திய அரசு விவசாயிகளின் பொறுமையைச் சோதிக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
குடியரசு தின டிராக்டர் பேரணி
இரு நாட்களில், குடியரசு தினத்தன்று டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். இந்த பேரணிக்கு இதுவரை அனுமதியளிக்கவில்லை என்று ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா தெரிவித்திருந்தார். இருப்பினும், டிராக்டர் பேரணியை நடத்துவதில் விவசாயிகள் மிகவும் உறுதியாக உள்ளனர். இந்தச் சூழ்நிலையில், மகாராஷ்டிராவில் விவசாய சட்டங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டுள்ள இந்தப் பேரணி மத்திய அரசுக்கு அழுத்தத்தை அதிகரித்துள்ளது.
பேச்சுவார்த்தை
இந்த விவசாய சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விவசாய சட்டங்களை சுமார் ஒன்றரை ஆண்டுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்க தயாராக இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், நிரந்தரமாகச் சட்டங்களைத் திருப்பப்பெற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துவதால் இரு தரப்பிற்கும் இடையே இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை.