சிசிடிவி கேமரா உதவியால் விபத்திலிருந்து தப்பியது மும்பை - கோல்ஹாப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்!
மும்பை: கண்காணிப்பு கேமரா உதவியால் மும்பை- புனே தடத்தில் நடக்க இருந்த பெரும் ரயில் விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது.
மும்பை- புனே இடையிலான ரயில் வழித்தடம் அதிக போக்குவரத்து நிறைந்தது. மலைப்பாங்கான பகுதிகள் வழியாகவும் செல்கிறது. மழைக்காலங்களில் இங்கு அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவது வாடிக்கையான நிகழ்வாகவிட்டது.
நிலச்சரிவு அபாயத்தால் மழைக்காலங்களில் இந்த தடத்தில் ரயில்கள் குறைவான வேகத்தில் இயக்கப்படுவதால், ரயில் போக்குவரத்தை கையாள்வதில் அதிக சிக்கல்கள் இருந்து வந்தது.
இந்த நிலையில், நிலச்சரிவு அபாயம் இருக்கும் இடங்களை கண்டறிந்து ரயில்வே சார்பில் சிசிவிடி கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதற்கான முழுப்பலன் இப்போது கிடைத்துள்ளது.
ஆம், நேற்று இரவு 8.15 மணியளவில் இந்த வழித்தடத்தில் லோனாவாலா பகுதியில் மலையிலிருந்து பாறாங்கற்கள் சரிந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்தன. இதனை சிசிடிவி கேமரா பதிவுகளை கண்காணித்து வந்த பணியாளார் பார்த்துவிட்டார். உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து, அவ்வழியாக வந்து கொண்டிருந்த மும்பை - கோல்ஹாப்பூர் இடையிலான சாஹ்யாத்ரி எக்ஸ்பிரஸ் ரயில் தாகூர்வாடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அதே வழித்தடத்தில் வந்த இதர ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.
சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே பணியாளர்கள், தண்டவாளத்திலிருந்து பாறாங்கற்களை அப்புறப்படுத்தினர். தண்டவாளத்தின் உறுதித்தன்மை மற்றும் பழுதுகள் ஆய்வு செய்யப்பட்டு பின்னர் ரயில்வே போக்குவரத்து துவங்கியது.
இரவு 11 மணியளவில் மீண்டும் ரயில் சேவை துவங்கியது. இதன் காரணமாக, சாஹ்யாத்ரி எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணிநேரம் தாமதமாக சென்றது. இதர ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன. சிசிடிவி கேமராவால் மும்பை- புனே ரயில் வழித்தடத்தில் நிகழ இருந்த பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.