மும்பையில் அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி- 20க்கும் மேற்பட்டோர் மீட்பு
மும்பை: மும்பையில் கனமழை வெளுத்து வாங்கியதால் 2 அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதன் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். மேலும் இடிபாடுகளில் இருந்து 20-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
மும்பையில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. 2015-ம் ஆண்டுக்குப் பின்னர் அதிக அளவில் பெய்த 2வது கனமழை இது. இதனால் மும்பை மாநகரமே வெள்ளக்காடாக மிதந்தது.
மும்பையின் மல்வானி பகுதியில் கட்டிடம் ஒன்று இன்று காலை இடிந்து விழுந்தது. இந்த கட்டிட இடிபாடுகளில் 4 பேர் சிக்கியிருந்தனர். இவர்களை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
இடதுசாரி சமூக செயற்பாட்டாளர் வரவர ராவுக்கு மும்பை சிறையில் கொரோனா
இதேபோல் கோட்டை பகுதியில் 6 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இன்று மாலை 4.43 மணிக்கு கோட்டை பகுதியில் உள்ள இக்கட்டிடம் விழுந்தது. இந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க 8 தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன.
அப்பகுதியில் முன்னெச்சரிக்கையாக 10 ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. இந்த மீட்பு பணிகளை முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். இடிபாடுகளில் இருந்து 20க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இந்த இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 2 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ 4 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அமைச்சர் ஆதித்யா தாக்கரே அறிவித்திருக்கிறார்.