சூப்பர், சூப்பர்.. சபாஷ் சரியான அடி.. மகாராஷ்டிராவின் 2 தாக்கரேக்களும் மக்களுக்குப் பாராட்டு!
மும்பை: 5 மாநில தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வாக்களித்துள்ள மக்களுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளார். அதேபோல மகாராஷ்டிர நவ நிர்மான் வேதிகே தலைவர் ராஜ் தாக்கரேவும் இது பாஜகவுக்கு கிடைத்த சம்மட்டி அடி என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவிலும், மத்தியிலும் பாஜக கூட்டணியில் இருக்கும் கட்சி சிவசேனா. ஆனாலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாஜகவை குத்திக் காட்ட தவறுவதில்லை இக்கட்சி. 5 மாநில தேர்தலில் பாஜகவை மக்கள் நிராகரித்து விட்டதாக உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
பாஜகவுக்கு எதிராக மக்கள் தைரியமாக வாக்களித்ததற்கும் அவர் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நெத்தியடி தீர்ப்பு
வாக்காளர்களுக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும். பாராட்ட வேண்டும். மிக தைரியமாக வாக்களித்துள்ளனர். அடுத்து யார் என்ற கேள்விக்கெல்லாம் இடம் தராமல் நெத்தியடியாக வாக்களித்துள்ளனர்.
எதையும் கண்டுகொள்ளவில்லை
வாக்குப் பதிவு இயந்திரம் குறித்தோ, பண விநியோகம் குறித்தோ, குண்டர்களின் மிரட்டல் குறித்தோ மக்கள் கவலைப்படவே இல்லை. யாரெல்லாம் தங்களுக்கு தேவையில்லை என்று நினைத்தார்களோ அவர்களை விரட்டியடித்துள்ளர். எதிர்காலம் குறித்த கவலைதான் மக்களிடம் தற்போது உள்ளது என்றார்.
ராஜ் தாக்கு
இதேபோல மகாராஷ்டிர நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவும் பாஜக தோல்வியை வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது பாஜக முகத்தில் விழுந்த பளார் அறையாகும். ராகுல் காந்தியை அவர்கள் பப்பு என்று கிண்டலடித்தனர். ஆனால் இப்போது அவர்கள் பூஜ்யமாகி விட்டனர்.
கோவில் தேவையில்லை
மக்களுக்கு ராமர் ராஜ்ஜியம்தான் தேவை. ராமர் கோவில் இல்லை. இதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும். பாஜகவின் நான்கு ஆண்டு கால தோல்வியை மறைக்கவே மீண்டும் ராமர் கோவிலை கையில் எடுத்தது பாஜக. அதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் என்றார் ராஜ் தாக்கரே.