மகாராஷ்டிரா: உத்தவ் முதல்வர்.. இரு துணை முதல்வர்கள்.. 3 கட்சிகளுக்கும் தலா 14 அமைச்சர்கள்
Recommended Video
மும்பை: மகாராஷ்டிரத்தில் என்சிபி - காங்கிரஸ் துணையுடன் சிவசேனா ஆட்சி அமைத்தால் இரு துணை முதல்வர் பதவியும் 3 கட்சிகளுக்கும் தலா 14 அமைச்சர் பதவிகளும் வழங்கப்படும் என தெரிகிறது.
மகாராஷ்டிரத்தில் மொத்தம் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலம் 146 தேவைப்படுகிறது. ஆனால் எந்தவொரு கட்சியும் அந்த மேஜிக் நம்பரை அடையவில்லை.
இந்த நிலையில் ஏற்கெனவே கூட்டணிகளாக உள்ள சிவசேனாவும் பாஜகவும் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல்வர் பதவியை சுழற்சி முறையில் அதாவது முதல் இரண்டரை ஆண்டுகள் தங்களுக்கு வழங்க வேண்டும் என உறுதியளித்தது போல் கொடுப்போம் என பாஜக எழுத்துப்பூர்வமாக எழுதி தர வேண்டும் என சிவசேனா கோரியது.
17 இலாகாக்கள்
இதற்கு பாஜக மறுத்துவிட்டது. துணை முதல்வர் பதவி, 17 இலாகாக்கள் என எத்தனையோ முறை சிவசேனாவை சமாதானப்படுத்தியும் அக்கட்சி முதல்வர் பதவியில் உடும்புப்பிடியாக உள்ளது.
சிவசேனாவுக்கு அழைப்பு
இந்த நிலையில் அதிக தொகுதிகளை பெற்றுள்ள பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஆட்சி அமைக்க அழைத்தார். ஆனால் பாஜகவோ ஆட்சி அமைக்க இயலாது என கூறிவிட்டது. இதையடுத்து அதிக தொகுதிகளை பெற்று 2-ஆவது இடத்தில் உள்ள சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
பேச்சுவார்த்தை இறுதி
எனவே என்சிபி- காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி கட்டிலில் அமர சிவசேனா முடிவு செய்து ஏற்கனவே பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் மறுபடியும் ஆதரவு கோரி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
தேசியவாத காங்கிரஸ் கட்சி
இந்த பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி இரு துணை முதல்வர் பதவிகள் ஏற்படுத்தப்படுகின்றன. அதில் ஒன்று தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுகிறது. இன்னொரு துணை முதல்வர் பதவி காங்கிரஸுக்கு அளிக்குமா இல்லை சேனாவே வைத்துக் கொள்ளுமா என தெரியவில்லை. மேலும் சிவசேனாவுடன் கூட்டணி அமைக்காமல் வெளியிலிருந்து ஆதரவு தர காங்கிரஸ் முன்வந்தால் அக்கட்சிக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படலாம் என தெரிகிறது. அதோடு 3 கட்சிகளிலிருந்தும் தலா 14 எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் என தெரிகிறது.
என்ன பதவி
இதன்படி முதல்வராக உத்தவ் தாக்கரேவும் துணை முதல்வரில் ஒரு பதவி அஜித் பவாரும் பதவியேற்பர் என தெரிவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த டீல் ஓகேவானால் தேர்தலில் போட்டியிடாமலே முதல்வர் ஆகும் தாக்கரே குடும்பத்தைச் சேர்ந்த முதல் நபர் என்ற பெருமை உத்தவுக்கு போய் சேரும். எனினும் அக்கட்சியினரே அறிவிக்கும் வரை எதையும் நம்புவதற்கில்லை என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.