மகாராஷ்டிரா முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே: சரத்பவார் அறிவிப்பு
மும்பை: மகாராஷ்டிராவின் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்பார் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், என்சிபி, சிவசேனா இணைந்து புதிய அரசை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தின. மும்பையில் இன்று இம்மூன்று கட்சிகளின் தலைவர்களும் இறுதிக் கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
இதன்பின்னர் செய்தியாளர்களிட ம் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மகாராஷ்டிராவில் புதிய அரசு உத்தவ் தாக்கரே தலைமையில் அமையும் என்றார். இதனைத் தொடர்ந்து மூன்று கட்சித் தலைவர்களும் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளனர்.
இதனிடையே துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவி பங்கீடு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய ஆலோசனை குறித்து கருத்து தெரிவித்த உத்தவ் தாக்கரே, ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் திருப்தி அளிக்கிறது என்றார்.
ஆளுநர் பயணம் ரத்து
இதனிடையே மகாராஷ்டிரா ஆளுநர் கோஷ்யாரியின் வெளியூர் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டிருக்கிறது. என்சிபி-காங்கிரஸ்-சிவசேனா தலைவர்கள் ஆட்சி அமைக்க உரிமை கோர வரலாம் என்பதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங். கருத்து
அதேபோல் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் பிரித்விராஜ் சவாண் கூறுகையில், அரசு அமைப்பது குறித்து 3 கட்சிகளும் ஆலோசனை நடத்தினோம். பல்வேறு விஷயங்களில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. நாளையும் பேச்சுவார்த்தை தொடரும் என்றார்.