ஆதார் எண் மீது சந்தேகம்.. 127 பேருக்கு நோட்டீஸ்.. பயப்பட வேண்டாம், குடியுரிமை பறிபோகாது என விளக்கம்
மும்பை: போலியான தகவல்களை அளித்து, ஆதார் அடையாள அட்டை பெற்றதாக எழுந்த புகாரையடுத்து, 127 பேருக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யூ.ஐ.டி.ஏ.ஐ) ஹைதராபாத் அலுவலகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், குடியுரிமை தொடர்பான சந்தேகத்தில் இவ்வாறு கேட்கப்படுவதாக தவறான தகவல் ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ளது என்று, விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமைச் சட்டத் திருத்தம் சட்டத்தால், இந்தியாவில் வாழும் சிறுபான்மையினருக்கும் பிரச்சினைகள் ஏற்படும் என்ற ஒரு கருத்து பரவுகிறது. இதை மத்திய அரசு மறுக்கிறது. இந்த நிலையில்தான், தெலுங்கானா மாநிலத்தில், 127 பேருக்கு ஆதார் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
நோட்டீஸ் பெற்றவர்களில் இஸ்லாமியர்களும் உள்ளனர். இந்த நிலையில்தான், யூ.ஐ.டி.ஏ.ஐ சார்பில் இதுதொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியுள்ளதை பாருங்கள்:
தெலங்கானா மாநில போலீசாருக்கு, சட்டவிரோதமாக நாட்டில் சிலர் வசித்துவருவதாக கிடைத்த தகவல்களின்படி தவறான தகவல்களை அளித்து ஆதார் அடையாள அட்டையை பெற்றுள்ள சிலருக்கு யு.ஐ.டி.ஏ.ஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக சில செய்தி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து வெளியான செய்திகள் சரியான கோணத்தில் வெளியிடப்படவில்லை.
குடியுரிமை விவகாரத்தில் ஆதாருக்கு தொடர்பு இல்லை. 'ஆதார் இந்திய குடியுரிமை தொடர்பான ஆவணம் இல்லை. ஆனால் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருபவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கக்கூடாது' என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தெலங்கானா மாநில போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிலர் தவறான தகவல்கள் அளித்து ஆதார் அடையாள அட்டை பெற்றுள்ளது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில், நாங்கள் 127 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இவர்கள் மீதான புகார் உண்மையாக இருக்கும்பட்சத்தில் ஆதார் அடையாள அட்டை, ஆதார் சட்டத்தின்படி ரத்து செய்யப்படும். எங்களின் சேவையின் தரத்தை மேலும் உயர்த்த நாங்கள் மேற்கொள்ளும் வழக்கமான நடைமுறைதான். இவ்வாறு யு.ஐ.டி.ஏ.ஐ. விளக்கம் அளித்துள்ளது.
நோட்டீஸ் அனுப்பப்பட்ட 127 பேரும் இது தொடர்பான ஆவணங்களுடன், விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராக வேண்டியுள்ளது. எனவே, விசாரணை மே மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.