எங்களால முடியாதுங்க… உயர்நீதிமன்றத்தில் கைவிரித்த தேர்தல் ஆணையம்.. விஷயம் இதுதான்
மும்பை: சமூக வலைதளங்களில் தெரிவிக்கப்படும் அரசியல் கருத்துகளை தடுக்க இயலாது என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அரசியல்வாதிகளோ, அரசியல் கட்சிகளோ தேர்தலுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பிருந்து விளம்பரங்களோ, பிரசாரமோ செய்யக்கூடாது என்று ஏற்கனவே விதி உள்ளது.இந் நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் சாகர் சூர்யவன்ஷி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தேர்தலுக்கு 48 மணி நேரம் முன்பாகவே, தேர்தல் விளம்பரங்கள், அரசியல் கருத்துகள் வெளியிட தடை விதிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதிகள் நரேஷ் பட்டீல், ஜாம்தார் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் ராஜகோபால் ஆஜரானார். தமது வாதத்தில் அவர் கூறியதாவது:
அரசியல்வாதிகளோ, அரசியல் கட்சிகளோ தேர்தலுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பிருந்து விளம்பரங்களோ, பிரசாரமோ செய்யக்கூடாது என்று ஏற்கனவே விதி உள்ளது. ஆனால் தனிநபர் ஒருவர் தனது வலைப்பதிவிலோ, பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலோ தனிப்பட்ட முறையில் ஆதரவாகவோ, எதிராகவோ கருத்து தெரிவித்தால், அதனை தேர்தல் ஆணையத்தால் எப்படி தடுக்க முடியும்? என்று குறிப்பிட்டார்.
இந்த வழக்கு விசாரணை இரு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, 14 பேர் கொண்ட குழு ஒன்று, வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் கருத்துகள் குறித்து அறிக்கை ஒன்றை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.