தேர்தல் தோல்வி- துரோகிகளுக்கு பதவியா? நடிகை ஊர்மிளா மடோன்கர் கொந்தளிப்பு- காங்.ல் இருந்து ராஜினாமா!
மும்பை: லோக்சபா தேர்தல் தோல்விக்கு காரணமானவர்களாக தாம் குற்றம்சாட்டிய நபர்களுக்கு கட்சியில் புதிய பதவிகள் தரப்படுவதாக கூறி காங்கிரஸில் இருந்து விலகியுள்ளார் பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர்.
லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக மார்ச் மாதம் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸில் இணைந்தார் ஊர்மிளா. லோக்சபா தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் ஊர்மிளா போட்டியிட்டார்.
ஆனால் இத்தொகுதியில் ஊர்மிளா தோல்வியைத் தழுவினார். தமது தோல்விக்கு காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி பூசல்தான் காரணம் என மும்பை காங்கிரஸுக்கு கடிதத்தை அனுப்பினார் ஊர்மிளா. ஆனால் அவரது கடிதம் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனையடுத்து இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஊர்மிளா, மடோன்கர் மும்பை காங்கிரஸுக்கு நான் அனுப்பிய கடிதங்கள் ஊடகங்களுக்கு கசியவிடப்பட்டன. அக்கடிதத்தில் தேர்தல் தோல்விக்கு இவர்கள்தான் காரணம் என குறிப்பிட்டிருந்தேன்.
தேர்தல் தோல்விக்கு அவர்களை பொறுப்பேற்க செய்யும் நடவடிக்கைகளை மும்பை காங்கிரஸ் மேற்கொள்ளவில்லை. ஆனால் அந்த நபர்களுக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டன.
இத்தகைய சிறுபிள்ளைத்தனமான உட்கட்சி கோஷ்டி பூசலை எதிர்கொள்ள முடியவில்லை. ஆகையால் காங்கிரஸில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்துள்ளார்.