செல்போனில் ‛ஹலோ’வுக்கு பதில் வந்தே மாதரம்.. அரசு ஊழியர்களுக்கு மகாராஷ்டிரா அமைச்சர் அதிரடி உத்தரவு
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் செல்போன் பேசும்போது ‛ஹலோ' என கூறுவதற்கு பதில் ‛வந்தேமாதரம்' என சொல்ல வேண்டும் என்று அம்மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் சுதிர் முங்கந்திவார் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தின. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தார்.
இந்த கூட்டணி ஆட்சி கடந்த இரண்டரை ஆண்டுகள் நடந்தது. இந்நிலையில் சிவசேனாவின் 30க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் கூட்டணிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
சியாச்சினில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்.. 38 ஆண்டுகளுக்கு பின் உடல் மீட்பு.. உருகும் குடும்பம்
அமைச்சரவை விரிவாக்கம்
இதையடுத்து சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றினர். ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ளார். துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார். கடந்த 9ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. மொத்தம் 18 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் 9 பேர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 9 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள்.
துறைகள் ஒதுக்கீடு
இந்நிலையில் நேற்று அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் முதல்வராக உள்ள ஏக்நாத் ஷிண்டேவுக்கு நகர மேம்பாட்டு துறையை வைத்து கொண்டுள்ளார். அதேநேரத்தில் உள்துறையை துணை முதல்வரான தேவேந்திர பட்னாவிசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கலாச்சாரத்துறை பாஜகவின் சுதிர் முங்கந்திவாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஹலோவுக்கு பதில் வந்தேமாதரம்
இதன் தொடர்ச்சியாக கலாசாரத்துறை அமைச்சரான சுதிர் முங்கந்திவார் அதிரடி உத்தரவு ஒன்றை வாய்மொழியாக பிறப்பித்துள்ளார். அதாவது அரசு ஊழியர்கள் செல்போனில் ‛ஹலோ' என கூறுவதற்கு பதில் ‛வந்தேமாதரம்' என கூற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக விரைவில் அதிகாரபூர்வ உத்தரவு வெளியிடப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
காரணம் என்ன?
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛நாம் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். 76வது சுதந்திர தினத்துக்குள் நுழைகிறோம். செல்போனில் பயன்படுத்தும் ஹலோ எனும் சொல் ஒரு ஆங்கில வார்த்தை. இதை விட்டுவிட வேண்டும். இதற்கு பதில் வந்தேமாதரம் எனும் வார்த்தையை பயன்படுத்த வேண்டும். இது எனது விருப்பம். வந்தேமாதரம் என்பது வெறும் வார்த்தையல்ல. ஒவ்வொரு இந்தியனும் அனுபவிக்கும் உணர்வு. இதன்மூலம் நாட்டின் மீதான பற்று அதிகரிக்கும்'' என்றார்.