யாராக இருந்தாலும்..'இது' இருந்தால் மட்டுமே வான்கடே மைதானத்தில் அனுமதி..திடீர் கிடிக்குப்பிடி உத்தரவு
மும்பை: கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டிருந்தாலும், வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நுழைய அனைவரும் கொரோனா நெகடிவ் சான்றிதழ்களைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது. தினசரி கொரோனா பாதிப்புகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 1.45 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
குறிப்பாக மகாராஷ்டிராவில் வைரஸ் பாதிப்பு மிக மோசமாக உள்ளது. அங்கு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வார இறுதி நாட்களிலும் இரவு நேரங்களிலும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிஎஸ்கே vs டெல்லி
இந்த இக்கட்டான சூழ்நிலையில், ஐபிஎல் போட்டிகள் நேற்று தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்களூரு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. இந்நிலையில், இன்று இரண்டாம் ஆட்டம் கொரோனா உச்சத்தில் இருக்கும் மும்பையில் நடைபெறுகிறது. வான்கடே மைதானத்தில் இன்றைய ஆட்டத்தில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி அணி சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது.
கொரோனா நெகடிவ் சான்றிதழ்
இந்நிலையில், மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பிசிசிஐ விதிகளின்படி ஐபிஎல் போட்டிகளைக் காண வான்கடே மைதானத்திற்கு வரும் அனைத்து அசோசியேஷன் உறுப்பினர்களும் அதிகாரிகளும் போட்டி நாளின் 48 மணி நேரத்திற்குள் கொரோனா நேகடிவ் சான்றிதழைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி எடுத்துக் கொண்டாலும் தேவை
ஏற்கனவே, ஒருவர் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டிருந்தாலும்கூட அவரும் கொரோனா நெகடிவ் சான்றிதழைக் கண்ணடிப்பாக வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் அனைத்து நாட்களிலும் நெகடிவ் சான்றிதழை சமர்ப்பிக்கும் நபர்களுக்கு மட்டுமே மைதானத்தில் அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வான்கடே மைதானம்
மும்பையில் அமைந்துள்ள வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கி வரும் ஏப்ரல் 25ஆம் தேதி வரை மொத்தம் 10 ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த முறை ஆறு மைதானங்களில் மட்டுமே ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகிறது. இதனால் எந்த அணிக்கும் ஹோம் அட்வான்டெஜ் இருக்கக்கூடாது என்பதற்காக, அனைத்து அணிகளுக்கும் அனைத்து போட்டிகளையும் நியூட்டிரல் மைதானத்திலேயே ஆடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தில் உள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் இங்கு சுமார் 58 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அதேபோல அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 301 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.