பாஜக எம்எல்ஏ பிறந்தநாளில் சக்களத்திகளுக்கிடையே குடுமிபிடி சண்டை.. சந்தடிசாக்கில் எம்எல்ஏவுக்கும் அடி
Recommended Video
மும்பை: பாஜக எம்எல்ஏ ராஜூ டோட்சம் பிறந்தநாளில் இரு மனைவிகளுக்கு இடையே குடுமிப்பிடி சண்டை நடந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் யவாத்மால் மாவட்டத்தைச் சேர்ந்த கேளாபூர் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜூ டோட்சம். பந்தார்கௌடாவில் இவர் கலந்து கொண்ட கபடி நிகழ்ச்சியிலேயே இவரது பிறந்தநாளை கொண்டாட ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த விழாவில் ராஜூவின் இரண்டாவது மனைவி பிரியா கலந்து கொண்டார். அப்போது அந்த இடத்துக்கு ராஜூவின் முதல் மனைவி அர்ச்சனாவும் அவரது ஆதரவாளர்களுடன் வந்தார்.
நடுவில் சிக்கிய
அந்த நேரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பிரியாவும் அர்ச்சனாவும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். நடுவில் சிக்கிக் கொண்ட எம்எல்ஏவுக்கும் சில அடிகள் விழுந்தன.
துரத்திய முதல் மனைவி
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து விட்டால் போதும் என பிரியாவும் எம்எல்ஏவும் தப்பியோடினர். எனினும் அர்ச்சனா அவரது ஆதரவாளர்களுடன் விடாமல் துரத்தினர்.
வீடியோ வைரல்
பின்னர் பிரியாவும் எம்எல்ஏவும் பந்தார்கௌடா காவல் நிலையத்தில் அர்ச்சனா மீது புகார் கொடுத்தனர். இதனிடையே இரு பொண்டாட்டி சண்டையில் மாட்டி சின்னாபின்னமான எம்எல்ஏவின் வீடியோ வைரலானது.
பெண் பிரமுகர்
ராஜூ டோட்சமின் முதல் மனைவி அர்ச்சனா தொடக்கப்பள்ளி ஆசிரியையாக உள்ளார். இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ராஜூ டோட்சம் கட்சியைச் சேர்ந்த பெண் பிரமுகர் பிரியாவுடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதில் முதல் மனைவியை அவர் விவாகரத்து செய்யவில்லை.