வயது என்பது வெறும் எண் மட்டுமே.. ஹரிஹார் கோட்டையில் ஏறி சாதனை படைத்த 68 வயது பாட்டி!
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஹரிஹார் கோட்டையில் ஏறி சாதனை படைத்திருக்கிறார் 68 வயது மூதாட்டி ஒருவர்.
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவர், அம்மாநிலத்தின் மிக உயரமான ஹரிஹார் கோட்டை மீது ஏறி சாதனை படைத்திருக்கிறார்.
Recommended Video
மனிதர்களுக்கு வயதாகிவிட்டால் அவர்களால் எதுவும் செய்ய முடியாது என நினைக்கிறோம். சிலருக்கு நடக்க முடியாது, கீழே உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாது என ஆயிரத்தெட்டு உடல்நலப் பிரச்சினைகள் வந்து விடும். ஆனால் வயது என்பது வெறும் எண் மட்டுமே, அதற்கும் உடல் உறுதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நிரூபிக்கிறது சமூகவலைதளங்களில் வைரலாகி இருக்கும் ஒரு வீடியோ.
அந்த வீடியோவில், மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகே மலை உச்சியில் இருக்கும் ஹரிஹார் கோட்டையின் செங்குத்தான படிகளில் மன உறுதியுடன் ஏறுகிறார் 68 வயது பாட்டி ஆஷா அம்பேத். அந்த மூதாட்டிக்கு உறுதுணையாக இருந்து உற்சாகப்படுத்துகிறார்கள் மற்றவர்கள்.
ஹரிஹார் கோட்டை என்பது நாசிக் நகரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் மலை உச்சியில் அமைந்திருக்கும் கோட்டையாகும். சுமார் 80 டிகிரி கோணத்தில் இருக்கும் செங்குத்தான படிகளில் ஏறுவது என்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. மிகுந்த மன உறுதியும், உடல் உறுதியும் இருந்தால் மட்டுமே ஒருவரால் ஹரிஹார் கோட்டைக்கு ஏறி செல்ல முடியும்.
அப்படிப்பட்ட கோட்டைக்கு 68 வயது மூதாட்டியான ஆஷா அம்பேத் மலையேறி சென்றதை பார்த்து நெட்டிசன்கள் ஆச்சரியக்கடலில் மூழ்கிவிட்டனர். அந்தப் பாட்டிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.