முதலிரவு முடிந்ததும் இதை செய்யக்கூடாது.. மகாராஷ்டிரா அரசு எச்சரிக்கை
Recommended Video
மும்பை: கன்னித்தன்மை சோதனையை பாலியல் பலாத்காரம் என்ற அடிப்படையில் கையாளப்போவதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவின் கன்ஜார்பாத் சமூகத்தில், இந்த காலகட்டத்திலும் கூட, கன்னித்தன்மை பரிசோதனை நடைமுறை உள்ளது. சில சமூகங்களில் ஒருகாலத்தில் நிலவிய இந்த கொடூர வழக்கம், இப்போது இல்லை என்றாலும், கன்ஜார்பாத் சமூகம் இதை விடுவதாக இல்லை.
புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு முதலிரவில்தான் கன்னித்திரை கிழிபட வேண்டும், அப்போதுதான் அவர் கற்புடைய பெண் என்பது இந்த சமூகத்தினரின் நம்பிக்கை.
முதலிரவு முடிந்ததும் ஆதாரம்
முதலிரவு முடிந்த மறுநாள், கன்னித்தன்மையோடு தான் இருந்ததற்கான 'ஆதாரத்தை' அந்த பெண் குடும்ப மூத்த உறுப்பினர்களிடம் காட்ட வேண்டும் என்பது கட்டாயமாகும். முதலிரவில் பெண்ணுறுப்பில் இருந்து ரத்தம் வர வேண்டும் என்றும், அந்த ரத்தத்தின் ஆதாரத்தை குடும்பத்திடம் காட்ட வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள்.
மருத்துவம் சொல்வது என்ன
பெண் உறுப்பில் உள்ள சிறு திரை போன்ற அமைப்பு மருத்துவ ரீதியாக கன்னித்திரை எனப்படுகிறது. இதில் ஏதாவது பொருள் படும்போது, அந்த திரை கிழிபட வாய்ப்புள்ளது. அல்லது சைக்கிள் ஓட்டுதல் மற்றும் சில கடினமான வேலைகள் செய்யும்போதும் கிழிபட வாய்ப்புள்ளது. ஆனால், இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், கன்னித்திரை இருந்தால்தான் அவர் கற்புடைய பெண் என கன்ஜார்பாத் சமூகம் இன்னும் நம்புகிறது.
சமூக ஆர்வலர்கள்
இதுபோன்ற நடைமுறைகளால் பாதிக்கப்பட்ட கன்ஜார்பாத் சமூக இளம் பெண்கள் சிலர், வாட்ஸ்அப் குரூப் மூலமாக, மனக்குமுறலை வெளிப்படுத்தினர். இந்த சமூகத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் இதுபற்றி, மகாராஷ்டிரா அரசு கவனத்திற்கு கொண்டு வந்தனர். அதில், கன்னித்தன்மை சோதனை என்ற பெயரில் பெண்களை கொடுமைப்படுத்துவோருக்கு எதிராக பெண்கள் அளிக்கும் புகாரை காவல்துறை ஏற்பதில்லை என்று தங்கள் குமுறலை வெளிப்படுத்தினர்.
புகார் அளித்தால் நடவடிக்கை
இந்த நிலையில், மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ரஞ்சித் பாட்டில் நிருபர்களிடம் கூறுகையில், கன்னித்தன்மை சோதனை நடத்துவோரை பலாத்கார குற்றவாளிகளாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அனைத்து காவல்நிலையங்களுக்கும், சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம் என்று தெரிவித்தார். அதேநேரம், பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தால்தான் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
V சடங்கு
மகாராஷ்டிராவில் கன்ஜார்பாத் சமூகத்தினரிடையே நிலவும் கன்னித்தன்மை பரிசோதனைக்கு சமூக ஆர்வலர்கள் வைத்துள்ள பெயர் V-சடங்கு என்பதாகும். இந்த சடங்கை நிறுத்த வேண்டும் என்று, சமூக வலைத்தளங்களில் கருத்தாக்கம் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.