பாலகோட்... விவேக் ஓபராய் தயாரிப்பில்.. விமானப்படை தீரத்தை போற்றும் படம்... பிரமாண்டமாக உருவாகிறது
மும்பை: பாலகோட் விமானப்படைத் தாக்குதல் சம்பவத்தையும், புல்வாமா தீவிரவாத தாக்குதலையும் அடிப்படையாக வைத்து பாலகோட் என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது. இதில் விவேக் ஓபராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இந்திய விமானப் படையின் தீரச் செயலுக்கு மரியாதை செய்யும் வகையில் இந்தப் படம் எடுக்கப்படவுள்ளது. ஜம்மு காஷ்மீர், டெல்லி, ஆக்ரா உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெறும். இந்த ஆண்டு பிற்பகுதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இந்தப் படத்தை தயாரிக்கப் போவதும் விவேக் ஓபராய்தான். இதற்குத் தேவையான அனுமதியையும் அவர் பெற்று விட்டாராம். இந்தி தவிர தமிழ் தெலுங்கிலும் இப்படம் உருவாகிறது. இந்த மூன்று மொழிகளிலும் பிரபலமான நடிகர்கள் படத்தில் நடிக்கவுள்ளனர்.
பாலகோட் ஹீரோ அபிநந்தன் கேரக்டரில் நடிக்கப் போவது யார் என்று இதுவரை தெரியவில்லை. அதேபோல பாகிஸ்தான் போர் விமானங்களின் ஊடுருவலைத் தடுத்து நிறுத்தி இந்திய விமானப்படை விமானங்களை வழி நடத்திச் சென்று தீரச் செயலில் ஈடுபட்ட வீராங்கனை ஸ்குவாட்ரான் லீடர் மின்டி அகர்வால் கேரக்டருக்கும் பொருத்தமானவர் பார்க்கப்படுகிறார்.
அபிநந்தனுக்கு அவரது தீரச் செயலுக்காக வீர் சக்ரா விருது அளித்து கெளரவிக்கப்பட்டது. அதேபோல யுத் சேவா பதக்கம் மின்டிக்கு அளிக்கப்பட்டது. இந்த பதக்கம் பெற்ற முதல் பெண் மின்டிதான்.
இந்தப் படம் குறித்து விவேக் ஓபராய் கூறுகையில் ஒரு பெருமைக்குரிய இந்தியனாக, தேசபக்தி கொண்டவனாக, திரைத் துறையைச் சேர்ந்தவனாக நமது படையினரின் தீரத்தையும், தகுதியையும் போற்ற வேண்டியது எனது கடமையாகும். அபிநந்தன் போன்ற நமது மாவீரர்களின் சாதனைகளை இந்தப் படத்தின் மூலம் வெளிக் கொண்டு வரவுள்ளோம்.
எதிரிகளின் கோட்டைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திய அபிநந்தன் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை தேடிக் கொடுத்து விட்டார். இந்திய விமானப்படையின் மிகத் திறமையான, துல்லியமான திட்டமிட்ட தாக்குதல் ஆகும். புல்வாமா தாக்குதல் தொடங்கி, பாலகோட் அதிரடி அட்டாக் வரை நான் ஒவ்வொன்றையும் விடாமல் செய்திகளில் படித்து வந்தேன்.
இந்தப் படம் குறித்து பல சந்தேகங்கள், ஊகங்கள் கிளப்பப்பட்டன. படம் வராது என்று கூட பலர் பேசினார்கள். ஆனால் தேவையான அனுமதி, நம்பிக்கை வைத்து எனக்கு அனுமதி அளித்த விமானப்படைக்கு நான் நன்றி சொல்கிறேன். அவர்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு நியாயமாக நடப்போம் என உறுதியாக நம்புகிறேன்.
சுதந்திர தினத்தன்று இந்த அனுமதியை விமானப்படை எனக்கு வழங்கியது. ஹாலிவுட் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அமெரிக்க படையினரைப் போற்றி படம் எடுக்கின்றனர். புலனாய்வு அமைப்புகளைப் போற்றி படம் எடுக்கின்றனர். ஆனால் இந்தியாவில் மட்டும் அதுபோன்ற படங்கள் வருவதில்லை. ஏன் என்று தெரியவில்லை. உலகின் மிக வலிமையான ராணுவங்களில் ஒன்று நமது இந்தியப் படை. நாம் நிறைய சாதித்துள்ளோம். இதை உலகுக்கு உரத்த குரலில் வலியுறுத்தி வெளிக் காட்ட வேண்டிய நேரம் இது என்றார் ஓபராய்.
விமானப்படை உண்மையில் பெரும் நம்பிக்கை வைத்தே இந்த அனுமதியை ஓபராய்க்கு வழங்கியுள்ளது. விமானப்படையின் மாண்பை உயர்த்திப் பிடிக்கும் எந்த முயற்சிக்கும் விமானப்படை வரவேற்பு கொடுத்துள்ளது. அந்த அடிப்படையில்தான் ஓபராய்க்கும் இந்த அனுமதி கிடைத்துள்ளது. அதேசமயம் ஓவர் டோஸாக சித்தரித்து விடுவது, நாடகத்தனமாக எடுப்பது போன்ற பிரச்சினைகளும் உள்ளன. ஆனால் பாலகோட் பட விவகாரத்தில் ஓபராய் சரியாக எடுப்பார் என்ற நம்பிக்கை விமானப்படைக்கு உள்ளது. இது மிகப் பெரிய சம்பவம் என்பதால் அதை கவனமாக எடுப்பார்கள் என்றும் விமானப்படை நம்புகிறது. இதுவே ஓபராய்க்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றிதான்.