மகாராஷ்டிரா: சகோதரர் சுனில் ராவத்துக்கு அமைச்சர் பதவி தரவில்லை என்பதால் அதிருப்தியா? சஞ்சய் ராவத்
மும்பை: மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கத்தில் தமது சகோதரர் சுனில் ராவத்துக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படாதது குறித்து சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் விளக்கம் அளித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. என்சிபியின் மூத்த தலைவர் அஜித் பவார் மீண்டும் துணை முதல்வரானார்.
உத்தவ் தாக்கரே மகன், ஆதித்யா தாக்கரேவும் அமைச்சரானார். இன்றைய அமைச்சரவை விரிவாக்கத்தில் சிவசேனா மூத்த தலைவரான சஞ்சய் ராவத்தின் சகோதரர் சுனில் ராவத்துக்கு இடம் கிடைக்கவில்லை.
இதனால் சுனில் ராவத் தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வார் என செய்திகள் பரவின. இது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறியதாவது:
தற்போதைய மகாராஷ்டிரா அரசை அமைப்பதில் எங்கள் குடும்பம் முக்கிய பங்காற்றி இருக்கிறது. நாங்கள் எப்போதும் சிவசேனாவில்தான் இருப்போம். தாக்கரே குடும்பத்துக்கு விசுவாசமாகவே இருப்போம்.
அமைச்சரவை விரிவாக்கம் என்பது 3 கட்சிகள் தொடர்புடையது. அனைவருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது.
நாங்கள் யாரும் அமைச்சர் பதவியை கேட்கவும் இல்லை. எப்போதும் போல் எங்களது கட்சிப் பணிகள் தொடரும். இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.