உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம்.. ஒற்றுமையாக இருக்கிறோம்.. கர்நாடக அதிருப்தி எம்எல்ஏ-க்கள் கோரஸ்
மும்பை: தாங்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை மதிப்பதாக கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் கூறியுள்ளனர்
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று இந்த கூட்டணி ஆட்சியில், அதிகார போட்டி மற்றும் அமைச்சர் பதவிகள் தரப்படாததை காட்டி ஏராளமான எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருந்தனர்.
அவர்களையெல்லாம் வளைத்து போட்டு பதவியை ராஜினாமா செய்ய வைக்க, எடியூரப்பா தலைமையிலான பாஜக, ஆபரேஷன் தாமரையை திட்டத்தை பலமுறை நிறைவேற்ற முயற்சித்தது.
ஆனால் எதுவும் கைகூடவில்லை. இடையில் மக்களவை தேர்தல் காரணமாக அமைதி காத்த பாஜக, மத்தியில் மீண்டும் ஆட்சி அமைந்தவுடன் தனது வேலையை காட்ட துவங்கியது கர்நாடகத்தில் எந்த கட்சிகளும் மீண்டும் தேர்தல் வருவதை விரும்பவில்லை.
அதிலும் 105 உறுப்பினர்களை வைத்துள்ள பாஜக தேர்தலை சந்திக்காமல் ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்தது. இந்த சதுரங்க ஆட்டத்தின் ஒருகட்டமாக கடந்த இரண்டு வாரங்களில், 15-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு பாஜகவின் பிடிக்குள் சென்றனர்.
ஆனால் அவர்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்கவில்லை. இதனையடுத்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கை கடந்த வாரம் விசாரித்த உச்சநீதிமன்றம், நேற்று வரை ராஜினமா செய்த எம்எல்ஏ-க்கள் மீது நடவடிக்கையோ அல்லது ராஜினாமா கடிதத்தின் மீது முடிவோ எடுக்க கூடாது என கூறியிருந்தது.
வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இரு தரப்பிலும் காரசாரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் சொன்னபடி இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
தீர்ப்பில் ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் முடிவெடுக்க எந்த கால வரையறையும் நிர்ணயிக்க தாங்கள் விரும்பவில்லை என கூறினர். அதே சமயம் ராஜினாமா கடிதம் வழங்கிய எம்எல்ஏ-க்களை நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க கட்டாயப்படுத்த கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.
Rebel #Karnataka MLAs in #Mumbai: We honour Supreme Court's verdict. We all are together. We stand by our decision. There is no question of going to the Assembly. pic.twitter.com/56z1XdPnMj
— ANI (@ANI) July 17, 2019
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து மும்பையில் தங்கியுள்ள கூட்டணி அரசு மீதான அதிருப்தி எம்எல்ஏ-க்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாக கூறியுள்ள அதிருப்தி எம்எல்ஏ-க்கள், அனைவரும் ஒற்றுமையுடன், தங்களது முடிவில் உறுதியாக உள்ளதாக கூறியுள்ளனர்.
அவர்களிடம் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சட்டமன்றத்திற்கு செல்வீர்களா என்று கேட்கப்பட்டதற்கு போக போவதில்லை என குறிப்பிட்டனர்,