ஒரே ஒரு கடனை அடைக்கலை.. அதுக்காக மல்லையாவை திருடன்னு சொன்னா எப்படி.. கத்காரி
Recommended Video
மும்பை: விஜய் மல்லையா ஒரு கடனை அடைக்கவில்லை. இதற்காக அவரை திருடன் என்று முத்திரை குத்துவது நியாயமானதல்ல என்று மத்திய அமைச்சர் நிதின் கத்காரி கூறியுள்ளார். நாற்பது வருடமாக அவர் கடன்களை எல்லாம் சரிவர அடைத்து வந்தவர் என்பதை மறந்து விடக் கூடாது என்றும் கத்காரி கூறியுள்ளார்.
அதேசமயம், தனக்கும் விஜய் மல்லையாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கத்காரி விளக்கியுள்ளார். விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் ரூ. 9000 கோடி கடன் வாங்கியுள்ளார். திருப்பிச் செலுத்தாத நிலையில் லண்டன் போய் விட்டார். தற்போது அவரை நாடு கடத்த லண்டன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கத்காரி பேசகையில், கடந்த 40 வருடமாக விஜய் மல்லையா தான் வாங்கிய கடன்களை முறையாக அடைத்துள்ளார். விமானத்துறைக்குள் நுழைந்ததும்தான் அவர் பல பிரச்சினைகளை சந்தித்துள்ளார். இதனால் கட்ட முடியாமல் போயுள்ளது. இதற்காக அவர் திருடன் ஆகி விடுவாரா.?
50 வருடம் வாங்கிய கடனை எல்லாம் முறையாக அடைக்கும் ஒருவர், ஒரு கடனை மட்டும் அடைக்காமல் போகும்போது அவரை திருடன் என்று கூறுவது நியாயமானதாக இல்லை.
மகாராஷ்டிர அரசுக்குச் சொந்தமான சிகாம் நிறுவனம் விஜய் மல்லையாவுக்கு கடன் கொடுத்திருந்தது. 40 வருடங்களுக்கு முன்பு இது கொடுக்கப்பட்டது. அதை அவர் முறையாக கட்டியுள்ளார். வியாபாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படத்தான் செய்யும். ஒருவர் கீழே விழும்போது மற்றவர்கள் அவருக்கு உதவ வேண்டும், ஆதரவாக இருக்க வேண்டும்.
வியாபாரத்தில் ரிஸ்க் அதிகம் உண்டு. அது வங்கியாக இருந்தாலும் சரி, இன்சூரன்ஸ் ஆக இருந்தாலும் சரி, ஏற்றத் தாழ்வு வரும். ஆனால் அதில் நாம் செய்யும் தவறுகளை வைத்து நமக்கான சான்றிதழாக அதை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கத்காரி கூறியுள்ளார்.