என்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக தேசியவாத காங்கிரஸுடன் ஆலோசனை நடத்திவிட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டேல் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அகமது பட்டேல், மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் மும்பையில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்துக்குப் பின்னர் இரு கட்சித் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அகமது பட்டேல் கூறியதாவது: மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலாக்கப்பட்ட முறை கண்டனத்துக்குரியது. பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸை அழைத்த ஆளுநர் எங்களை அழைக்காதது ஏன்? 5 ஆண்டுகளில் பாஜக அரசு, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை மீறி ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துகிறது.
சிவசேனா ஆட்சி அமைப்பதற்கான ஆதரவை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை நேற்று தொடர்பு கொண்டு உத்தவ் தாக்கரே கேட்டிருந்தார். எங்களது கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.
மகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா
இந்த ஆலோசனைக்குப் பின்னர் சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் சில சந்தேகங்களுக்கு தீர்வு காண சோனியா காந்தி விரும்புகிறார். இவ்வாறு அகமது பட்டேல் கூறினார்.
இச்சந்திப்பில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறுகையில், ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் நாங்கள் அவசரப்படவில்லை. காங்கிரஸுடன் ஆலோசனை நடத்திவிட்டு சிவசேனாவுக்கு ஆதரவு தருவது குறித்து முடிவு செய்வோம் என்றார்.
மற்றொரு தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல், ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனா அதிகாரப்பூர்வமாக நேற்று எங்களை தொடர்பு கொண்டது; அனைத்து பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து முடிவெடுப்போம்.
சிவசேனா முதல் முறையாக எங்களை தொடர்பு கொண்டது. எந்த ஒரு முடிவையும் அறிவிப்பதற்கு முன்னால் அனைத்து விவகாரங்களுக்கும் தெளிவான விளக்கங்கள் பெறப்பட வேண்டும் என விரும்புகிறோம் என்றார்.