ரஜினி போல அங்கிட்டு மிதுன் சக்கரவர்த்தி-மே.வங்க தேர்தலை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் மோகன் பகவத் சந்திப்பு
மும்பை: மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் பாலிவுட் நடிகரும் மாஜி அரசியல்வாதியுமான மிதுன் சக்கரவர்த்தியை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இன்று மும்பையில் சந்தித்து பேசினார்.
பாலிவுட் உச்ச நட்சத்திரமான மிதுன் சக்கரவர்த்தி மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். சில ஆண்டுகளுக்கு முன்னர் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து ராஜ்யசபா எம்.பி.யானார்.
பின்னர் உடல்நிலையை காரணம் காட்டி ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்தார். சர்ச்சைக்குரிய சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் விளம்பர தூதராக செயல்பட்டதால் மிதுன் சக்கரவர்த்தியும் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
மே.வங்க தேர்தல்
பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்தார் மிதுன் சக்கரவர்த்தி. தற்போது மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மேற்கு வங்கத்தில் எப்படியும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்கிற படுதீவிர முனைப்பில் பாஜக இருந்து வருகிறது.
மிதுன் சக்கரவர்த்தி- பகவத் சந்திப்பு
இந்த நிலையில் மும்பையில் மிதுன் சக்கரவர்த்தியை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இன்று சந்தித்து பேசினார். மேற்கு வங்க தேர்தலை முன்னிட்டு பாஜகவில் மிதுன் சக்கரவர்த்தி இணையலாம் எனவும் கூறப்படுகிறது; அதற்கு முன்னோட்டமாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது என்கின்றன தகவல்கள்.
பாஜகவில் சேரவில்லை
ஆனால் எதையும் யூகிக்காதீர்கள்; அப்படியான எதுவும் நடைபெறவில்லை. லக்னோவில் ஏற்கனவே மோகன் பகவத்தை சந்தித்திருக்கிறேன். என்னுடைய வீட்டுக்கு வருமாறு விடுத்த வேண்டுகோளை ஏற்றுதான் அவர் வருகை தந்தார் என்கிறார் மிதுன் சக்கரவர்த்தி.
ரஜினி- மிதுன்சக்கரவர்த்தி
தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் நடிகர் ரஜினிகாந்தை இறக்க பாஜக படுதீவிரமாக முயற்சித்தது. ஆனால் கொரோனாவை முன்வைத்து அரசியலுக்கே நான் வரவில்லை என ரஜினிகாந்த் ஒதுங்கிக் கொண்டார். இப்போது மேற்கு வங்க தேர்தலுக்காக மிதுன் சக்கரவர்த்தியை வைத்து பாஜக ஸ்கெட்ச் போடுகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.