சனிக்கிழமை அதிர்ச்சியே இன்னும் நீங்கலை!.. பட்னவிஸும் அஜித்தும் நள்ளிரவில் மீண்டும் ஆலோசித்தது ஏன்?
Recommended Video
மும்பை: சனிக்கிழமை அதிர்ச்சியே இன்னும் நீங்கவில்லை. அதற்குள் தேவேந்திர பட்னவிஸும் அஜித்பவாரும் மீண்டும் ஆலோசனை நடத்தியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மகாராஷ்டிராவில் சனிக்கிழமை அம்மாநில மக்களுக்கு மட்டும் அல்ல அரசியல் பார்வையாளர்கள், இந்திய அரசியல் கட்சிகள், மற்ற மாநிலத்து மக்கள் என அனைவருக்குமே அதிர்ச்சியாகவே இருந்திருக்கும்.
ஆம் வெள்ளிக்கிழமை இரவு வரை சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் கூட்டணியில் புதிய ஆட்சி அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சற்றும் எதிர்பாராதவிதமாக பாஜக ஆட்சி பொறுப்பேற்றது. முதல்வராக பட்னவிஸும், துணை முதல்வராக அஜித் பவாரும் பொறுப்பேற்று கொண்டனர்.
இந்த விவகாரம் சரத்பவாருக்கே பெரும் அதிர்ச்சியாக இருந்தது. மேலும் அஜித் பவார் எடுத்த முடிவு என்சிபியின் முடிவல்ல என கூறியிருந்தார். எனவே ஏதோ தகிடுதத்தம் செய்து பாஜகவுக்கு அஜித் ஆதரவு அளித்துள்ளது தெரியவந்தது.
அது போல் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், முதுகில் குத்திவிட்டார் என அஜித் பவாரை விமர்சித்தார். சனிக்கிழமை நிகழ்வுகள் அனைத்தையும் ஒரு நாள் இரவில் பேசி ஆபரேஷனை சக்ஸஸாக நடத்தியதும் தெரியவந்தது.
இந்த நிலையில் தான் என்சிபியில்தான் இருக்கிறேன் என்றும் பாஜக- என்சிபி கூட்டணி நிலையான ஆட்சியை கொடுக்கும் என அஜித் பவார் தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து சரத்பவார் விளக்கமளிக்கையில், பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே அஜித் பவார் தவறாக சொல்கிறார் என்றார்.
இதையடுத்து தேவேந்திர பட்னவிஸும் அஜித் பவாரும் நள்ளிரவில் திடீர் சந்திப்பு நடத்தி ஆலோசனை செய்தனர். திங்கள்கிழமை மீண்டும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது என நினைத்திருந்த வேளையில் அவர்கள் என்ன பேசினர் என்பது குறித்து முதல்வர் அலுவலகமே வெளியிட்டுவிட்டது.
இதுகுறித்து மகாராஷ்டிரா முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அஜித் பவாருடனான சந்திப்பு ஆட்சி அமைப்பது குறித்து விவாதிக்கவில்லை. மழையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிவாரணம் அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது என அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.