இந்தியாவில் நுழைந்த "பிளாக் கொக்கைன்"! வாசமே வராதாம்.. சிக்கியது எப்படி! அதிர வைக்கும் தகவல்கள்
மும்பை: மும்பை ஏர்போர்ட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிளாக் கொக்கைனை அதிகாரிகள் கண்டுபிடித்த நிலையில், அது என்ன என்பது குறித்த இணையத்தில் பலரும் தேடி வருகின்றனர்.
போதைப்பொருள் பயன்பாடு சமீப ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் போதைப்பொருள் சப்ளையை மிக எளிமையானதாக மாற்றுகிறது.
இதன் காரணமாக இந்தியாவில் போதைப்பொருள் பயன்பாடு என்பது சில ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கஞ்சா போதையில் காலேஜ் மாணவர்கள்! கன்னியாகுமரியில் கொட்டிக் கிடந்த கொக்கைன்! தட்டித்தூக்கிய போலீஸ்!
பிளாக் கொக்கைன்
கடந்த சில நாட்களுக்கு முன்பு, மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பிளாக் கொக்கைனை எடுத்து வந்த பொலிவியா நாட்டுப் பெண்ணை கடந்த சில நாட்களுக்கு முன்பு போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கோவாவில் வசித்து வந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த ஒருவரை என்சிபி அதிகாரிகள் கைது செய்தனர்.
12 பாக்கெட்கள்
அதிக போதை தரும் பிளாக் கொக்கைன் இந்தியாவில் கைப்பற்றப்படுவது இதுவே முதல்முறையாகும். அந்த பொலிவியா நாட்டின் பெண்ணின் உடைமைகளில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 12 பாக்கெட்டுகளை என்சிபி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதில் இருந்த கருப்பு நிற பொருளை ஆய்வு செய்த போது தான், அது பிளாக் கொக்கைன் என்பதை என்சிபி உறுதி செய்தது. அதன் பின்னர் அந்த பெண் கைது செய்யப்பட்டார்.
அதென்ன பிளாக் கொக்கைன்
பிளாக் கொக்கைன் என்பது அரிய வகை போதை மருந்தாகும். வழக்கமான கொக்கைன் மற்றும் சில குறிப்பிட்ட கெமிக்கல்களை மிக்ஸ் செய்தால் அந்த பிளாக் கொக்கைன் கிடைக்கும். ஏர்போர்ட்டுகளில் மோப்ப நாய்களிடம் இருந்து தப்பிக்க இந்த முறையைக் கடத்தல்காரர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த கெமிக்கல்கள் கொக்கைன் வாசத்தை போக்குகிறது. இதில் கொக்கைன் உடன் சார்கோல் போன்ற சில குறிப்பிட்ட கெமிக்கல்கள் கலக்கப்படும்.
மீண்டும் பிரித்தெடுப்பது எப்படி
இந்த கலவை சில அடிப்படை சோதனைகளில் இருந்தும் தப்ப உதவுகிறது. மேலும் கொக்கைன் வாசத்தையும் மட்டுப்படுத்துகிறது. வெற்றிகரமாகக் கடத்தி வரப்பட்ட பின்னர், மெத்திலீன் குளோரைடு அல்லது அசிட்டோன் போன்ற கெமிக்கல்களை மிக்ஸ் செய்து கொக்கைன் மட்டும் பிரித்து எடுப்பார்கள். அடுத்து அதை கொக்கைன் பவுடராக மாற்ற அத்துடன் ஹைட்ரோகுளோரைட்டை சேர்ப்பார்கள்.
கண்டுபிடித்தது யார்
இதுபோன்ற பிளாக் கொக்கைன் 1980கள் முதலே புழக்கத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக கூறியதை போல இவை கடத்தலுக்குத் தான் பெரும்பாலும் பயன்பட்டன. 1980களில் சிலி சர்வாதிகாரி அகஸ்டோ பினோசெட் என்பவரின் உத்தரவின் பெயரில் இது உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 2008இல் ஸ்பெயினில் இந்த பிளாக் கொக்கைன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
கவலை
அதைத் தொடர்ந்து 2021இல் ஸ்பெயினில் சுமார் 860 கிலோ பிளாக் கொக்கைன் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது இந்தியாவிற்கும் இது நுழைந்து உள்ளது. மும்பையில் அதிகாரிகள் இதைப் பிடித்து உள்ளனர். என்சிபி அதிகாரிகளுக்குச் சரியான நேரத்தில் தகவல் கிடைத்ததால் இந்த பிளாக் கொக்கைனை பிடிக்க முடிந்தது. அந்தத் தகவல் மட்டும் அவர்களுக்குச் சரியான நேரத்தில் கிடைக்கவில்லை என்றால் பிளாக் கொக்கைனை கண்டுபிடித்து இருக்க முடியாது என்பதால் இது குறித்து அதிகாரிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.