தாராவியில் குறைந்த வைரஸ் தொற்று.. வெற்றி ரகசியம் இதுதான்!
மும்பை: மும்பை, தாராவியில் தொடர்ந்து கொரோனா தொற்று விகிதம் குறைந்து வருவதற்கு மத்திய அரசு மும்பை மாநகராட்சியை பாராட்டியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் இருக்கும் தாராவியில் துவக்கத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்தது. இந்த நிலையில் மும்பை மாநராட்சி எடுத்த அதிரடி முடிவுகளால் கடந்த மே மாதம் கொரோனா தொற்று 4.3% ஆக குறைக்கப்பட்டு, ஜூன் மாதத்தில் 1.02% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதத்தில் 43 ஆக இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை, ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் 19ஆக குறைந்துள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பின்னர் முதன் முறையாக தாராவியில் கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்று ஒற்றை இலக்காக அடியோடு குறைந்துள்ளது.
கொத்து கொத்தாக பரவிய கேஸ்கள்.. பெங்களூரில் திடீரென கட்டுப்பாடு அதிகரிப்பு.. எடியூரப்பா அதிரடி!
கிடுகிடு உயர்வு
ஏப்ரல் மாதத்தில் 18 நாட்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை 491ஆக அதிகரித்து, 12% வளர்ச்சியில், அதாவது இரட்டை மடங்கு அதிகரித்தது. ஏப்ரல் ஒன்றாம் தேதி தாராவியில் முதல் கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்டது. அன்றே ஒரு உயிரிழப்பும் நிகழ்ந்தது. இதற்குப் பின்னர் அங்கு வேகமாக தொற்று பரவியது. 10க்கு 10 சதுர அடி வீட்டில் 9, 10 பேர் என்று குடியிருந்து வரும் நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது மாநில அரசுக்கும், மும்பை மாநகராட்சிக்கும் சவாலாகவே இருந்தது. உடனடியாக மும்பை மாநகராட்சி 48 மணி நேரத்தில் செயலில் இறங்கியது. தாராவிக்குள் செல்லும் சாலை மற்றும் வெளியேறும் சாலைகளை மூடியது. 425 பொது கழிப்பிடங்களிலும் கிருமி நாசினி தெளித்தது. வீட்டுக்கு வீடு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
திட்டமிட்டு செயல்பட்டனர்
ஏப்ரல் மாதம் வீட்டுக்கே சென்று உணவுகளை வழங்கினர். தாங்களாகவே முன் வந்து நோய் அறிகுறிகளை பதிவு செய்வதற்கு மக்கள் சிறப்பு மருத்துவர்கள் மூலம் ஊக்கப்படுத்தப்பட்டனர். வைரஸ் தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தவர்கள் மருத்துவமனைகளிலும், சிலர் அங்கேயே நிறுவப்பட்டு இருந்த முகாம்களிலும், சிலர் வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டனர். சிலர் தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர்.
கட்டுப்பட்டது
கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடர்ந்து ஐந்து நாட்கள் தினமும் 23%அதிகரித்து வந்த கொரோனா வைரஸ், ஜூன் 20 ஆம் தேதி வரையிலான ஐந்து நாட்களில் தினமும் 0.85% என்ற அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. இதையடுத்தே தாராவியில் இருக்கும் சில சிறு தொழில் நிறுவனங்களை திறப்பதற்கு மாநகராட்சி முடிவு செய்தது. தற்போது மாதுங்கா தொழிலாளர் முகாம், 90 அடி சாலை, தாராவி கிராஸ் சாலை, குஞ்சி கோர்வ் நகர் ஆகிய இடங்களில் மட்டும் தொற்று அதிகரித்து வருவதால், அங்கு மாநகராட்சியின் கவனம் திரும்பியுள்ளது.
சனிக்கிழமை 7 பேர்தான்
கடந்த சனிக்கிழமை வெறும் 7 பேர் மட்டுமே தாராவியில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு இருந்தனர். இத்துடன் அங்கு தற்போதைய பாதிப்பு 2000த்துக்கும் அதிகமாக இருக்கிறது. மும்பை நகரில் வைரஸ் தொற்று பரவல் விகிதம் 3%ஆக இருக்கையில், தாராவியில் 1.57% ஆக இருக்கிறது. இவற்றுக்கும் மேலாக ஒரு சந்தோசம் அளிக்கும் செய்தியாக கடந்த மே 30 ஆம் தேதியில் இருந்து ஜூன் 8 ஆம் தேதி வரை உயிரிழப்பு பதிவாகவில்லை.
இதுவரை 79 பேர் பலி
இதற்குப் பின்னர் ஏழு உயிரிழப்பு பதிவாகி தாராவியில் மொத்த உயிரிழப்பு இதுவரை 79 ஆக உள்ளது. மும்பை மாநகராட்சி முதலில் 47000 பேரை பரிசோதனை செய்த பின்னர், 350 தனியார் மற்றும் தாராவி மருத்துவர்களை பணியில் அமர்த்தியது. அவர்களுக்கு பாதுகாப்பு கவசங்களை மும்பை மாநகராட்சி வழங்கியது. கிளினிக் அமைக்க அனுமதி வழங்கியது. மும்பை மாநகராட்சியும் கிளினிக் அமைத்தது. இவை தவிர சிறப்பு காய்ச்சல் முகாம்களும் அமைக்கப்பட்டன. வேன்களில் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நம்பிக்கை அதிகரிப்பு
முதலில் தாராவி மக்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே நம்பிக்கை பற்றாக்குறை இருந்தது. தங்களை தாராவியில் இருந்து காலி செய்வதற்கு மாநகராட்சி முயற்சிக்கிறது என்று துவக்கத்தில் மக்கள் கருதியுள்ளனர். பின்னர், மருத்துவர்கள் ஏற்படுத்திய நம்பிக்கைக்குப் பின்னர் தங்களது ஒத்துழைப்பை வழங்கினர். மொத்தமாக 5,48,270 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் 8246 பேர் தற்காலிகமாக தங்களது குடும்பத்தில் இருந்து பிரித்து வைக்கப்ட்டனர்.
மாநகராட்சியின் நான்கு T
நான்கு 'T'க்களை மாநகராட்சி கடுமையாக பின்பற்றியது. அதாவது, 'Tracing, Tracking, Testing, Treating' என்ற நான்கு வழிகளைப் பின்பற்றி கொரோனா வைரஸ் தொற்றை மாநகராட்சி குறைத்துள்ளது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கையை மத்திய அரசு பாராட்டியுள்ளது. மே மாதம் வரை நோய் தொற்றுக்கு உள்ளானவர்களை அதிக பாதிப்புக்கு உள்ளானவர்கள், குறைந்த பாதிப்புக்கு உள்ளானவர்கள் என்று இருவகையாக பிரித்தனர். இதையடுத்து, தாராவியில் பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்துபவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் நபர்கள் என்று கருதி அவர்களை தனிமை முகாம்களுக்கு மாற்றியுள்ளனர்.
தாராவியில் வைத்தே சிகிச்சை
பள்ளிகள், விளையாட்டு காம்ப்ளக்ஸ், ஹாஸ்டல்கள், சமூக அரங்குகள் அமைக்கப்பட்டு நோயாளிகள் தங்க வைக்கப்பட்டனர். மேலும் தாராவி பகுதியில் இருக்கும் ஐந்து தனியார் மருத்துவமனைகளை மாநகராட்சி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 90% நோயாளிகள் தாராவிக்குள் வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டனர். மிகவும் மோசமான நோயாளிகள் மட்டுமே தாராவிக்கு வெளியே மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால், தொற்றும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதுவும் வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்ததற்கான வெற்றி மந்திரமாக இருக்கிறது. தாராவியில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 2,27,136 பேர் குடியிருந்து வருகின்றனர். இங்கு வசிக்கும் 80% பேர் பொதுக் கழிப்பிடத்தை மட்டுமே நம்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.