என்ன நடக்கிறது அம்பானி குடும்பத்தில்.? தந்தை காங்., வேட்பாளருக்கு ஆதரவு, மகனோ மோடி கூட்டத்தில்..
மும்பை: மும்பையில் நடைபெற்ற பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், இந்திய பணக்காரர்களில் ஒருவரான தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி முதல் வரிசையில் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க - சிவசேனா கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. அம்பானி, அதானி போன்ற தொழிலதிபர்களுக்கு சேவகம் செய்யவே மோடி பிரதமர் பதவிக்கு வந்ததாக, தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்கட்சிகள் சரமாரியாக குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் தெற்கு மும்பை மக்களவை தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா போட்டியிடுகிறார். ரிலையன்ஸ் நிறுவன அதிபரான முகேஷ் அம்பானி, தியோராவுக்கு வெளிப்படையாக ஆதரவு அளிப்பதாக கடந்த வாரம் அறிவித்தார். முகேஷ் அம்பானி தமக்கு ஆதரவு தெரிவித்தது குறித்த வீடியோவை மிலிந்த் தியோரா வெளியிட்டிருந்தார்.
"புது மோடி"யை களம் இறக்கும் பாஜக.. 240 தொகுதிகளில் பெரும் லாபத்தை ஈட்ட.. பலே திட்டம்!
இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு விளக்கம் அளித்திருந்த முகேஷ் அம்பானி, மிலிந்த் தியோரா எனக்கு நெருங்கிய நண்பர். மும்பையின் அடையாளமாக திகழ்பவர். தெற்கு மும்பையின் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார சூழல் அமைப்பு பற்றிய ஆழமான அறிவு அவருக்கு உள்ளது. அதனால் தான் வரும் மக்களவை தேர்தலில் நேரடியாக அவருக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறினார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், நேற்று மும்பையில் பிரதமர் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி சென்றுள்ளார். மேலும் அந்த கூட்டத்தின் முதல் வரிசையிலேயே ஆனந்த் அம்பானி அமர்ந்திருந்தார்.
இது குறித்து பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஆனந்த் அம்பானி, பிரதமர் மோடியின் பேச்சை கேட்பதற்காக இந்த கூட்டத்துக்கு சென்றதாக கூறியுள்ளார்.