தங்கமே உன்னைத்தான் தேடி வந்தோமே.. உலகமே நாடி ஓடுது.. கிடுகிடு விலை உயர்வின் பின்னணி என்ன?
Recommended Video
மும்பை: தங்கம் எப்போதுமே தங்கம்தான்.. அதற்கான மதிப்பு எந்த காலத்திலும் குறையப்போவதில்லை என்பது மீண்டும் கட்டியம் கட்டி கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் இறுதியில், மளமளவென குறைந்துகொண்டிருந்த தங்கத்தின் விலை அதன்பிறகு, விறுவிறுவென ஏறிக்கொண்டுதான் உள்ளது. செப்டம்பரிலிருந்து ஒப்பிட்டால், இதுவரை 11 சதவீதம் அளவுக்கு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
உலகிலுள்ள பல மத்திய வங்கிகளும், தங்கத்தை போட்டி போட்டு வாங்கி குவித்து வருவது இதற்கு முக்கிய காரணம். 1971ம் ஆண்டுக்கு பிறகு இப்படி தங்கத்தின் மீதான மோகம் மீண்டும் அதிகரித்திருப்பது இதுதான் முதல் முறை என்கிறார்கள். 2018ம் ஆண்டில் பல்வேறு நாட்டின் மத்திய வங்கிகள் குவித்த தங்கம் 651.5 டன்களாகும். அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிட்டால் இது 74 சதவீதம் அதிகம் என்கிறது, உலக தங்க கவுன்சில் அறிக்கை.
எந்த அளவுக்கு உலகின் முக்கிய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவித்துள்ளன என்பதற்கு இதைவிட சான்று தேவையிருக்காது. பல்வேறு நாட்டின் வங்கிகளும் ஏன் இப்படி தங்கத்தை வாங்கி குவிக்கின்றன? என்ற கேள்வி அடுத்ததாக எழலாம். இதற்கெல்லாம் காரணம், உலகின் பெரியண்ணன்களான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நடக்கும் 'வர்த்தக போர்தான்'.
எனவேதான், எல்லா நாடுகளும் 'சேஃபாக' தங்கத்தை வாங்கி குவிக்க ஆரம்பித்துள்ளன. பணத்தின் மதிப்புகள் மாறும், ஆனால், தங்கம் தங்கம்தானே! இதுதான், தங்கத்தின் மீதான மோகத்திற்கு காரணம்.
"சீனா மற்றும் அமெரிக்கா நடுவேயான வணிக போர் முடிவு எப்படியாகும் என தெரியாது. ஐரோப்பாவில், பிரெக்ஸிட் நடைமுறை எப்படி முடியும் என கணிக்க முடியவில்லை. முடிவுகள் மோசமாக போனால், வளரும் பொருளாதார நாடுகள்தான் பாதிப்படையும். எனவேதான், அவை, தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளன' என்கிறார், ரிலையன்ஸ் நிப்பான் ஃலைப் அசெட் மேலாண்மை நிறுவன தலைவர், விக்ரம் தவான்.
அமெரிக்க டாலரில் முதலீடு செய்வது ஆபத்தானது என்ற மனநிலைக்கு பல நாட்டு மைய வங்கிகளும் வந்துள்ளன. டாலர் வழியாக வர்த்தகம் செய்யும் நடைமுறை குறைந்தால், இந்த முதலீடுகள் வீணாகும் என்பதால், தங்கமே பெஸ்ட் என்ற முடிவுக்கு அவை வந்துள்ளளன.