மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்- ஆளுநர் முடிவுக்கு காரணமே என்சிபி கேட்ட 2 நாள் அவகாசம்தான்!
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் தற்போது ஜனாதிபதி ஆட்சி அமலாகியுள்ளது. இம்மாநிலத்தில் திடீரென ஜனாதிபதி ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரைத்தது ஏன் என்பது பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாஜக, சிவசேனாவை தொடர்ந்து 54 இடங்களை வென்ற 3-வது கட்சி என்ற அடிப்படையில் தேசியவாத காங்கிரஸுக்கு ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு விடுத்திருந்தார். இன்று இரவு 8.30 மணி வரை தேசியவாத காங்கிரஸுக்கு ஆளுநர் ஆட்சி அமைக்க அவர் அவகாசம் கொடுத்திருந்தார்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களுடன் தேசியவாத காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் இன்று காலை 11.30 மணிக்கு ஆளுநரிடம் தேசியவாத காங்கிரஸ் கடிதம் மூலம் ஒரு கோரிக்கையை முன்வைத்தது.
அதில், ஆட்சி அமைப்பதற்கு மேலும் 2 நாட்கள் அதாவது 48 மணிநேர அவகாசம் அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார், காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது. காங்கிரஸ் இன்னமும் ஆதரவு கடிதத்தை தரவில்லை என கூறியிருந்தார்.
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸின் 2 நாட்கள் அவகாச கோரிக்கையை ஆளுநர் கோஷ்யாரி நிராகரித்தார். அத்துடன் இன்று இரவு 8.30 மணிவரை தேசியவாத காங்கிரஸுக்கு கொடுத்த கால அவகாசத்தையும் ஆளுநர் கோஷ்யாரி ரத்து செய்தார்.
இதன்பின்னர்தான் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க இயலாத நிலை இருக்கிறது; ஆகையால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு ஆளுநர் கோஷ்யாரி பரிந்துரைத்தார். உடனடியாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த பரிந்துரை ஏற்கப்பட்டது.
பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு இதை உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்தது. தற்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் கிடைத்ததால் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி நடைமுறைக்கு வந்துள்ளது.