வெங்காயத்தின் விலை உயர்வு ஏன்?.. கட்டுக்குள் வைக்க மத்திய அரசு எடுத்த இரு அஸ்திரங்கள் என்னென்ன?
மும்பை: பீகார் தேர்தலுக்கு ஒரு வார காலம் இருக்கும் நிலையில் வெங்காயத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருவது மக்கள் மனதில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது போல் திடீரென வெங்காயத்தின் விலை உயர காரணம் என்ன, அதை கட்டுப்படுத்த துரிதமாக மத்திய அரசு முயற்சி எடுத்து வருவது ஏன் என்பது குறித்து பார்ப்போம்.
இந்தியாவில் வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டு பெண்கள் அதை பார்த்தவுடன் கண்களில் ரத்த கண்ணீரை வரவழைக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று மும்பையில் ரூ 100க்கு விற்கப்பட்டது, அது போல் சென்னையிலும் ஒரு கிலோ 120 க்கு விற்கப்பட்டு வருகிறது.
இந்த வெங்காயத்தின் விலை கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து உயர்ந்து வருகிறது. வடக்கு கர்நாடகாவில் கனமழையால் வெங்காய உற்பத்தி என்பது கடுமையாக பாதித்தது. அது போல் செப்டம்பர் மாதம் பெய்த மழை புதிதாக நடவு செய்த வெங்காயத்திற்கு மட்டும் சேதம் அளிக்கவில்லை. மாறாக மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் சேகரித்து வைக்கப்பட்ட வெங்காயத்திற்கும் கடும் பாதிப்பை தந்தன.
ஆன்லைன் வகுப்பு, விநாயகருக்கு மாஸ்க் , கூடவே வெங்காயம்.... களைகட்டிய கடைசி நாள் நவராத்திரி..!
4000 - 6000 டன்
மகாராஷ்டிராவில் மட்டும் 28 லட்சம் டன் வெங்காயங்களை கோடை காலத்தின் தொடக்கத்தில் விவசாயிகள் சேமித்து வைத்திருப்பர். இந்தியாவில் ஆண்டுக்கு 160 லட்சம் டன் வெங்காயம் தேவைப்படுகிறது. மகாராஷ்டிராவில் மட்டும் ஒரு நாளைக்கு 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் டன் வரை தேவைப்படுகிறது.
வெங்காய விலை
வெங்காயத்தின் விலை திடீரென உயர்ந்துள்ளது மத்திய அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் பீகார் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எதையாவது செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது.
மத்திய அரசு
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955-இல் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டது. அதன்படி வெங்காய இறக்குமதிக்கு தடை விதித்தது. அது போல் இருப்பு வைக்கும் அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் இருந்து வெங்காயம், உருளை, சமையல் எண்ணெய், பருப்புகள் ஆகியவற்றை நீக்கியது.
வெங்காய விலை
இந்த நிலையில் பீகார் தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த இரு வேறு திட்டங்களை வகுத்தது. ஒன்று வெங்காயத்தை இருப்பு வைக்கும் பட்டியலில் வெங்காயத்தை வெள்ளிக்கிழமை மீண்டும் இணைத்தது. இதன் மூலம் இருப்பு வரம்பு என்பது விலையை கட்டுக்குள் வைக்கும் சிறந்த ஆயுதம் என்பதை உணர்ந்தது. அதன்படி மொத்த விற்பனையாளர்கள் 25 டன் வெங்காயத்தை இருப்பு வைத்து கொள்ளவும் சில்லறை வணிகர்கள் 2 டன் வெங்காயத்தை இருப்பு வைத்துக் கொள்ளவும் அரசு அனுமதித்தது.
தளர்வுகள்
மற்றொரு முயற்சியாக வெங்காய இறக்குமதி விதிகளில் தளர்வுகளை கொடுத்தது. இதையடுத்து ஈரான், துருக்கி மற்றும் வெங்காயம் உற்பத்தி செய்யும் மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவில் கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்டது. இதன் மூலம் மகாராஷ்டிராவில் 600 டன் வெங்காயம் கிடைத்தது. இப்படியாக வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு போராடுகிறது.