சரத் பவார் கட்சியோடு கூட்டணி கூடாது.. சிவசேனா எம்எல்ஏக்கள் திடீர் போர்க்கொடி..மோதல்.. பரபர பின்னணி
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சிக்குள் நடப்பது எதுவும் சரியில்லை, குழப்பம் நிலவுகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்க சிவசேனா முடிவு செய்துள்ளது. இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோர திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சந்திப்பு திடீரென ரத்தாகியுள்ளது. எப்போது மறுபடியும் ஆளுநரை சந்திக்கப்போகிறோம் என்ற உறுதியான அறிவிப்பும் சிவசேனா தரப்பில் இருந்து வரவில்லை.
புது லுக்கில் முகிலன்.. தமிழ் மண் தமிழருக்கானது.. விட மாட்டோம்.. திருச்சி சிறை வாசலில் ஆவேசம்
ஹோட்டலில் மோதல்
இந்த நிலையில்தான், ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஹோட்டலில் தங்கியுள்ள சிவசேனா எம்எல்ஏக்களிடையே, மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எம்.எல்.ஏ.க்களிடையேயான பரஸ்பர மோதல் பற்றிய செய்தி அறிந்ததும் முதல்வர் வேட்பாளரும், வோர்லி தொகுதி எம்எல்ஏவுமான ஆதித்யா தாக்கரே அந்த இடத்தை சென்றடைந்ததாக கூறப்படுகிறது.
விரைந்த உத்தவ் தாக்ரே
ஒருகட்டத்தில், மோதல் முற்றியதால், உத்தவ் தாக்கரேவும் ஹோட்டலுக்கு செல்ல வேண்டியிருந்தது. முதலமைச்சர் பதவி தொடர்பாக தாக்கரே குடும்பத்தின் முடிவு குறித்தும் எம்.எல்.ஏக்கள் கேள்வி எழுப்பியுள்ளதாகவும், அதன் காரணமாகவே, கட்சிக்குள்ளேயே மோதல் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
குடும்ப நலன்
தாக்கரே குடும்பத்திற்கு மட்டுமே பயனளிக்கும் இதுபோன்ற முடிவுக்காக முழு கட்சியையும் ஏன் அடமானம் வைக்கப்பார்க்கிறீர்கள் என்று எம்எல்ஏக்களில் சிலர் கருதுகிறார்களாம். உத்தவ் தாக்கரே என்சிபி தலைவர் சரத் பவாரை சந்தித்ததில் சிவசேனா எம்எல்ஏக்கள் மகிழ்ச்சியடையவில்லை என்று கூறப்படுகிறது.
மக்கள் கேள்வி
பவார் ஒருபோதும் அதிகாரத்தை சிவசேனா கையில் எடுக்க விடமாட்டார் என்று எம்.எல்.ஏக்களில் சிலர் உத்தவ் தாக்ரேவை எச்சரித்துள்ளனர். தேர்தல் நடந்தபோது, யாருக்கு எதிராக பிரச்சாரம் செய்தோமோ, அதே கட்சிகளுடன் ஏன் கூட்டணி சேர்ந்தீர்கள் என்று வாக்காளர்கள் கேள்வி கேட்டால், என்ன பதில் சொல்வது என்று சில எம்எல்ஏக்கள் தாக்கரேவிடம் கேட்டுள்ளனர்.
மோதல்
பாஜக மற்றும் சிவசேனா இடையே, முதலமைச்சர் பதவியைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக, மோதல் ஏற்பட்டு, தேர்தலுக்குப் பிறகு கூட்டணி முறிந்தது, இப்போது வரை அரசு ஒன்றை அங்கு ஏற்படுத்த முடியவில்லை. பாஜகவுடன் கூட்டணியை முறித்தால், தனது எம்.எல்.ஏ.க்கள் நடுவே பிளவு ஏற்படுமோ என்று சிவசேனா அஞ்சியது. இதன் காரணமாக எம்எல்ஏக்களை ஹோட்டலில் தங்க வைத்திருக்கிறது. இருப்பினும், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்க சில எம்எல்ஏக்கள் கையெழுத்திட மறுப்பதால்தான் ஆளுநரை இன்று சிவசேனா குழு சந்திக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.