சஞ்சய் ராவத் சொல்வதை பார்த்தால்.. மீண்டும் துணை முதல்வராகிறாரா அஜித் பவார்?
Recommended Video
மும்பை: சிவசேனா- காங்கிரஸ்- என்சிபி கூட்டணியில் அஜித்பவார் மிக முக்கிய பங்கு வகிப்பார் என சஞ்சய் ராவத் தெரிவித்தார். இதை பார்த்தால் அஜித் பவாருக்கு முன்பே பேசியபடி துணை முதல்வர் பதவி கொடுக்கப்படும் என தெரிகிறது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் சிவசேனா கட்சிக்காக முக்கிய பங்காற்றியவர் சஞ்சய் ராவத். சுழற்சி முறையிலான முதல்வர் பதவியை கோரியதிலும் சரி, தற்போது சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்பது வரை சிவசேனாவுக்கு பக்கபலமாக இருப்பார் சஞ்சய் ராவத்.
இந்த நிலையில் நாளை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்கிறார். இதுகுறித்து சிவசேனாவின் சஞ்சய் ராவத் கூறுகையில் சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வர் என நான் கூறியபோது அனைவரும் என்னை கிண்டல் செய்தனர். ஆனால் இன்று அனைத்தும் முடிந்து முதல்வராக பதவியேற்க உத்தவ் தாக்கரே தயாராக உள்ளார்.
இந்தியா
வருங்காலத்தில் அஜித்பவாருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. அவருக்கு மிக முக்கிய பங்கு இருக்கும். அவர் எங்களுடையவர். உத்தவ் தாக்கரேவுடன் மகாராஷ்டிராவில் இருந்து மாற்றம் இந்தியா தொடங்குகிறது.
அமித்ஷா
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரையும் பதவியேற்பு விழாவுக்கு அழைப்போம் என்றார். அஜித்பவாரை என்னதான் முதுகில் குத்திவிட்டார் என சஞ்சய் ராவத் கூறியிருந்தாலும் அவர் எங்களுடையவர் என தற்போது கூறியுள்ளார்.
ராஜினாமா
அஜித் பவார் மட்டும் தனது தவறை உணர்ந்து துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால் பாஜக அரசு கவிழ்ந்திருக்காது. அஜித் பவார் ராஜினாமாவுக்கு பிறகே தங்களுக்கு பெரும்பான்மை இனியும் கிடைக்காது என தேவேந்திர பட்னவீஸ் உணர்ந்தார். பின்னர் முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
பதவி
இதையடுத்து இரவோடு இரவாக ஆளுநர் கோஷ்யாரியை சந்தித்த உத்தவ் தாக்கரே ஆட்சி அமைக்க உரிமை கோரினார். நாளை சிவசேனா கட்சியின் முதல் முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்கிறார். இத்தனை சம்பவங்கள் நிகழ காரணமாக இருந்த அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என தெரிகிறது.
துணை முதல்வர்
இது முன் கூட்டியே பேசப்பட்டதுதான். உத்தவ் தாக்கரே முதல்வர், அஜித் பவார் துணை முதல்வர், சபாநாயகர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு என பேசப்பட்டது. எனவே அஜித் பவாருக்கு முக்கிய பங்கு இருக்கும் என சஞ்சய் ராவத் கூறுவதை பார்த்தால் அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என தெரிகிறது.