சுத்தமாக எடுபடாத நானா படோலே மேஜிக்.. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் படுதோல்வி! பாஜகவுக்கு வெற்றி முகம்
மும்பை: நமது நாட்டின் பொருளாதார தலைநகராகக் கருதப்படும் மகாராஷ்டிராவில் விவசாயிகள் அதிகம் இருக்கும் பகுதி என்றால் அது விதர்பா.. இந்த பிராந்தியம் என்பது கடந்த காலங்களில் பஜகவுக்கே ஆதரவளித்து வந்துள்ளது. ஆனால், காங்கிரஸ் தலைவராக நானா படோலே நியமிக்கப்பட்ட பிறகு, அங்கு நிலைமை சற்று மாறியது போல தெரிந்தது. ஆனால், இப்போது சட்டசபை தேர்தலில் நானா படோலேவால் அங்கு காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை பெற்று தர முடியவில்லை என்பதே உண்மை,
கிழக்கு மகாராஷ்டிராவில் அமைந்துள்ள வித்ரா பிராந்தியத்தில் மொத்தம் 62 இடங்கள் உள்ளன. அங்கு 36 தொகுதிகளில் நேரடியாகவே காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

காங்கிரஸ்: கடந்த 2014 தேர்தலில் பாஜக இந்த 62 இடங்களில் 44 இடங்களில் வென்றது. அப்போது காங்கிரஸ் வெறும் 10 இடங்களில் மட்டுமே இங்கு வென்றது. அந்த தேர்தலில் நானா படோலே பாஜகவில் தான் இருந்தார். அப்போது விதர்பா பிராந்தியத்தில் பாஜக இந்தளவுக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெறுவதில் அவருக்கும் முக்கிய பங்கு இருந்ததாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக பண்டாரா, கோண்டியா, வார்தா மற்றும் சந்திராபூர் ஆகிய நான்கு மாவட்டங்களின் முடிவுகள் நானா படோலேவுக்கு மிக முக்கிய பங்கு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த முறை அவர் அதையே காங்கிரஸ் கட்சிக்கும் செய்ய முடிந்தால் அது மிகப் பெரிய சாதனையாகவே இருக்கும்.
நானா படோலே: நானா படோலே காங்கிரஸில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இருப்பினும் 2008ம் ஆண்டில் அவர் பாஜகவில் இணைந்தார். மகாராஷ்டிராவில் விதர்பா பிராந்தியத்தில் விவசாயிகளின் அவலநிலை குறித்து மத்திய அரசு கண்டுகொள்வதில்லை என்று குற்றஞ்சாட்டியே அவர் பாஜகவில் இணைந்தார். 2014ம் ஆண்டு பண்டாரா- கோண்டியா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்றார்.
அதேநேரம் 2017ம் ஆண்டில் அவர் மீண்டும் பாஜக தலைமைக்கு எதிராகத் திரும்பினார். 2008ம் ஆண்டை போலவே விவசாயிகளை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை என்று கூறி அவர் பாஜகவில் இருந்து விலகினார்.. 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்த நிலையில், அவர் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.
விதர்பா: விதர்பாவில் காங்கிரஸின் கம்பேக்கிற்கு இது முதல் அறிகுறியாக இருந்தது. அங்கு 2021ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் எண்ணிக்கை 10 இடங்களிலிருந்து 15 ஆக உயர்ந்தது. இதையடுத்து 2021ம் ஆண்டில் நானா படோலே மகாராஷ்டிரா காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டார். இது பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஆனால், அவரது நியமனம் கை மேல் பலன் கிடைத்தது.
விதர்பா பிராந்தியத்தில் மொத்தம் 10 லோக்சபா தொகுதிகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த லோக்சபா தேர்தலில் இங்கு பாஜக கூட்டணியால் வெறும் 3 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. காங்கிரஸ் கூட்டணி 7 இடங்களில் வென்றது. இந்த சட்டசபைத் தேர்தலிலும் அவரால் மீண்டும் அதைச் செய்ய முடிந்ததால் அது நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய பலனைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அதை அவரால் செய்ய முடியவில்லை. பாஜக மிக பெரிய வெற்றியை நோக்கி பயணிக்கும் நிலையில், காங்கிரஸ் மிக மோசமான தோல்வியடையும் சூழலே நிலவுகிறது.












Click it and Unblock the Notifications