அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா... மகளை எதிர்த்து போட்டியிடும் தந்தை
மும்பை: மஹாராஷ்டிரா மாநில சட்டமன்றத்தேர்தலில் பாஜக மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே தனது மகள் ரோகிணியை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் இம்மாதம் 21-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் பாஜக சார்பில் வெளியிடப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலில் பல சீனியர்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. அதில் பாஜக மூத்த தலைவரும், அமைச்சராக இருந்தவருமான ஏக்நாத் கட்சேவும் ஒருவர். 1991-ம் ஆண்டு முதல் முக்தி நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஏக்நாத் கட்சே.
இந்நிலையில் அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதால், அவருக்கு பதில் அவரது மகள் ரோகிணிக்கு தேர்தலில் போட்டியிட சீட் அளித்துள்ளது பாஜக தலைமை. இதனிடையே சொந்தமகளை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் ஏக்நாத் கட்சே. அவரிடம் மகள் ரோகிணி சமாதானம் பேச முயற்சித்தும் கட்சே ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனால் மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிசுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. சரி மகளுக்கு சீட் கொடுப்பதன் மூலம் ஏக்நாத் கட்சேவை சமாளித்துக்கொள்ளலாம் என நினைத்தால் அவர் அதிரடியாக சுயேச்சையாக களம் காண்கிறார். மேலும், தன்னை விட ஜூனியரான பட்னாவிஸ் யார் தனக்கு சீட் கொடுக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய என்றும், அவர் சொல்வதை தலைமை ஏன் அப்படியே கேட்கிறது எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதேபோல் சீட் எதிர்பார்த்து கிடைக்காத காரணத்தால் மஹாராஷ்டிரா பாஜக மூத்த தலைவரான வினோத் ஆவ்டேவும் கட்சியின் தேசியத் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார். அவர்களை சரிகட்டும் பொறுப்பை ஏற்றுள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.