நீங்க எவ்வளவு போட்டிருந்தாலும் வங்கிக்கு ஏதாவது நேர்ந்தால்.. உங்களுக்கு ரூ.1 லட்சம் தான் கிடைக்கும்
மும்பை: வங்கிகள் திவால் ஆனாலோ அல்லது தோல்வி அடைந்து கலைக்கப்பட்டாலோ அந்த வங்கிகளில் எவ்வளவு டெபாசிட் செய்திருந்தாலும் வைப்புத்தொகையாளர்களுக்கு ரூ.ஒரு லட்சம் மட்டுமே காப்பீடு தொகை கிடைக்கும் என ரிசர்வ் வங்கியின் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் (டி.ஐ.சி.ஜி.சி) தெரிவித்துள்ளது.
வங்கிகளில் பிக்சட் டெபாசிட், சேமிப்பு கணக்கில் போடப்பட்ட பணம், கரண்ட் அக்கவுண்ட் மற்றும் பிற கணக்குகளில் போடப்பட்டுள்ள பணத்திற்கான காப்பீடுகள் விவரம் குறித்து பிடிஐ செய்தி நிறுவனம் ரிசர்வ் வங்கியின் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்திடம் (DICGC), தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தது.
இதற்கு பதில் அளித்த அந்த நிறுவனம் "டி.ஐ.சி.ஜி.சி சட்டம், 1961 இன் பிரிவு 16 (1) இன் விதிகளின் கீழ், ஒரு வங்கி தோல்வியுற்றால் / கலைக்கப்பட்டால், டி.ஐ.சி.ஜி.சி ஒவ்வொரு வைப்புத்தொகையாளருக்கும் பணத்தை பிரித்து செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, ஒருவர் வங்கியின் அனைத்து கிளைகளிலும் சேர்ந்து வைத்திருக்கும் அசல் மற்றும் வட்டிக்தொகைக்கு காப்பீடு தொகையாக ஒரு லட்சம் ரூபாய் அளிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.
ஒரு லட்சம் தான்
சமீபத்தில் பி.எம்.சி வங்கி மோசடியை அடுத்து வங்கியில் காப்பீடு செய்யப்பட்ட ரூ .1 லட்சத்தின் வரம்பை உயர்த்த ஏதேனும் திட்டம் உள்ளதா அல்லது பரிசீலிக்கப்படுகிறதா என்று கேட்கப்பட்டதற்கு, டி.ஐ.சி.ஜி.சி, "காப்பீடு உயர்த்துவது பற்றிய போதுமான தகவல்கள் எங்களிடம் இல்லை" என்று கூறியுள்ளது.
கூட்டுறவு வங்கிகள்
இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகளின் கிளைகள், உள்ளூர் வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுமே ரிசர்வ் வங்கியின் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்திற்கு உட்பட்டது தான். இதேபோல் டி.ஐ.சி.ஜி.சி சட்டத்தின் பிரிவு 2 (g.g) இல் வரையறுக்கப்பட்டுள்ள அனைத்து தகுதியான கூட்டுறவு வங்கிகளும் டெபாசிட் காப்பீட்டு திட்டத்தின் கீழ் உள்ளன.
காப்பீடு வழங்கப்படும்
"ஒரு வங்கியில் உள்ள ஒவ்வொரு வைப்புத்தொகையும் வங்கியின் உரிமத்தை கலைத்தல் / ரத்து செய்த தேதி அல்லது ஒருங்கிணைத்தல் / இணைப்பு / புனரமைப்பு திட்டம் நடைமுறைக்கு வரும் தேதி வரை அதிகபட்சம் ஒரு லட்சம் வரை காப்பீடு செய்யப்படுகிறது" என்று டிஐசிஜிசி தெரிவித்துள்ளது.
டி.ஐ.சி.ஜி.சி பதில்
பல்வேறு வங்கிகளில் மோசடிகள் வெளிச்சத்துக்கு வெளியாகி வரும் நிலையில், மக்களின் சேமிப்பிற்கு இந்த மோசடிகள் ஆபத்தை விளைவித்து வரும் நிலையில்,. இப்படி ஒரு பதிலை டி.ஐ.சி.ஜி.சி தெரிவித்து இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது. இந்த பதில் வங்கியில் சேமிப்பு கணக்கில் பணம் போட்டுள்ளோருக்கான பண உறுதி பாதுகாப்பை அச்சத்துக்கு உள்ளாக்கி உள்ளது.
பிஎம்சி வங்கி
செப்டம்பர் 24 அன்று, மகாராஷ்டிராவை தலைமையிடமாக கொண்ட பிஎம்சி வங்கியின் செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்தது. அந்த நிறுவனத்தில் மோசடி சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் அங்கு டெபாசிட் செய்த மகாராஷ்டிரா மக்களிடையே அச்சம் இன்றுவரை நிலவுகிறது.