அதிருப்தி எம்எல்ஏக்களை அலற விடும் காங்கிரஸ் தொண்டர்கள்.. ஹோட்டலுக்கு வெளியே போராட்டம்
மும்பை: மும்பையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு வெளியே இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தர்ணா நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பையிலுல்ள போவாய் என்ற ஹோட்டலில்தான் கர்நாடக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 15 அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கியுள்ளனர். சட்டசபையில் இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நிலையில், ஹோட்டலுக்கு வெளியே இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் தர்ணா நடத்தி வருகிறார்கள்.
அவர்கள் கைகளில் காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏந்தியிருந்தனர். பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டனர். இதையடுத்து அங்கே காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் போராட்டக்காரர்களை அங்கேயிருந்து அகற்ற பெரும் சிரமப்பட்டனர்.
இந்த போராட்டத்திற்கு நடுவேயும், எந்த ஒரு அதிருப்தி எம்எல்ஏவும் வெளியே வந்து எட்டிப் பார்க்கவில்லை. ஏற்கனவே காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் மும்பை ஹோட்டலுக்கு, அதிருப்தியாளர்களை சந்திக்க சென்றபோதும், காவல்துறையினர் அவரை உள்ளே விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.